
ஈரான் போருக்கு மத்தியில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன் இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய தினம் கூட கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சில நாடுகளில் பெட்ரோல், டீசல் கடுமையாக விலை உயர்ந்தியுள்ளன.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. ஏற்கனவே இது போன்று பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அன்றைய தினம் இரவே பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உயர்த்தப்படும் என மக்கள் நம்பினர். நேற்றைய தினம் மே.வங்கத்தில் கடைசி கட்ட வாக்குபதிவு நடைபெற்றதால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படக்கூடும் என பங்குகளி்ல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.இந்த நிலையில், இந்தியாவிலும் மே 1 முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 10, டீசல் லிட்டருக்கு ரூ. 12.50 உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டதாக அறிக்கை பரவியது.
இதுகுறித்து, மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாகக் கூறி மத்திய அரசு வெளியிட்டதாகப் பரவி வரும் அறிக்கையானது முற்றிலும் போலியானது. இதுபோல எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. எந்த அறிவிப்பாக இருந்தாலும், அரசின் அதிகாரபூர்வ தளங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.