சாதாரண நடுத்தர குடும்பம்.
சாதாரண கல்லூரி வாழ்க்கை.
ஆனால் சாதாரண கனவுகள் இல்லை.
இளங்கலை வரலாறு படிக்க கல்லூரியில் சேர்ந்த நேரத்தில் தான் உலகையே முடக்கிய கொரோனா வந்தது.
எல்லோரும் “அடுத்து என்ன ஆகுமோ?” என்று பயந்துகொண்டிருந்த நேரத்தில், வித்ய ஸ்ரீ ஒரு விஷயத்தை கவனித்தார்.
உலகமே நின்றாலும்…
இயற்கை மட்டும் நின்றுவிடவில்லை.
மரங்கள் பூத்துக்கொண்டே இருந்தன.
தேனீக்கள் பறந்துக்கொண்டே இருந்தன.
விவசாயம் இயங்கிக்கொண்டே இருந்தது.
அதுதான் அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம்.
“எல்லாரும் தொழில் நிறுவனங்கள்ல வேலை தேடிக்கிட்டிருந்த நேரத்துல, நான் இயற்கையோட சேர்ந்து வேலை செய்யணும்னு முடிவு பண்ணேன்,” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் வித்ய ஸ்ரீ.
அந்த முடிவுதான்… இன்று அவரை “குயின் பீ” ஆக மாற்றியிருக்கிறது.
“பொண்ணுங்க போய் தேனீ வளர்க்கிறதா?”
ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து சென்றாலே கேள்வி கேட்கும் சமூகம் இது.
அப்படியிருக்க… ஆயிரக்கணக்கான தேனீக்களோடு வேலை செய்யப் போகிறேன் என்றால்…. வீட்டிலிருந்தே எதிர்ப்பு வந்தது.
“முதல்ல படிப்பு முடி.”
“இது பெண்களுக்கு சரியான வேலை இல்லை.”
“தேனீ கொட்டினா எப்படி வலிக்கும் தெரியுமா?” என்கிற கேள்விக் கணைகள் கொடுக்குகள் கொண்ட தேனீக்களைப் போலவே சுற்றி வந்தன.
ஆனால் வித்ய ஸ்ரீயின் பதில் தீர்க்கமாக இருந்தது.
“ஆறு மாதம் டைம் குடுங்க… என்னால சாதிக்க முடியலன்னா நான் திரும்பிப் போய்ப் படிக்கிறேன்.”
இந்த பதிலின் அழுத்தம்
ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை பிரதிபலித்தது.