டீசல் பற்றாக்குறை; உழவுக்கு டிராக்டருக்கு பதில் பாரம்பர்ய மாடுகளுக்குத் திரும்பும் மகா., விவசாயிகள்

Spread the love

மகாராஷ்டிராவில் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை விவசாயத்திற்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய டிராக்டராவது இருக்கும். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்தது. அதோடு எரிபொருள் பற்றாக்குறையும் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு சரிவர டிராக்டர் பயன்பாட்டிற்கு தேவையான எரிபொருள் கிடைக்காமல் இருக்கிறது. 2000வது ஆண்டுக்கு முன்பெல்லாம் அதிக அளவில் விவசாயிகள் உழவடிக்க காளை மாடுகளை பயன்படுத்தினர். ஆனால் இப்போது காளை மாடுகளை கொண்டு உழவடிப்பதை பார்ப்பது மிகவும் அபூர்வமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவிலும் அதே நிலைதான் இருக்கிறது. இளம் விவசாயிகள் அதிக அளவில் உழவடிக்க டிராக்டர்களையே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் விவசாயிகள் மீண்டும் காளை மாடுகளை பயன்படுத்தி உழவடிப்பது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். மகாராஷ்டிராவில் பருவ மழை அடுத்த மாத தொடக்கத்தில் பெய்ய ஆரம்பிக்கும்.

மகாராஷ்டிராவின் மராத்வாடா மாவட்டத்தில் இருக்கும் பீட் மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பருவமழைக்கு முன் நிலத்தை உழ முடியாமல் தவித்து வருகின்றனர். டிராக்டர்களை இயக்க எரிபொருள் இல்லாததால் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இது குறித்து பர்வேஸ் பட்டேல் என்ற விவசாயி கூறுகையில்,”பருவமழைக்கு முந்தைய மழை எந்நேரமும் பெய்யக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால் எனது 14 ஏக்கர் நிலங்கள் உழப்படாமல் அப்படியே கிடக்கின்றன. வழக்கமாக உழவடிக்கும் டிராக்டர்கள் அதிக அளவில் இந்த நேரத்தில் தென்படும். ஆனால் இப்போது டிராக்டர்களையே பார்க்க முடிவதில்லை”என்று கவலையுடன் தெரிவித்தார்.

ஆரம்பகால மழையில் விதைப்பு பணிகளை தவறவிட்டால் ஒட்டுமொத்த விதைப்பு காலமும் தள்ளிப்போகும் என்றும் அவர் தெரிவித்தார். தாமதமாக விதைக்கப்படும் பயிர்கள் பூச்சித் தாக்குதலுக்கும் உள்ளாகும். இம்மாதம் 26 அன்று கேரளாவுக்குள் நுழையும் தென்மேற்கு பருவமழை, உடனடியாக மராத்வாடா பகுதிக்கும் பரவும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், நிலம் நனைவதற்குள் உழவு செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பீடு பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறை தற்போது பீடு மாவட்டத்தைத் தாண்டி சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மராத்வாடா பிராந்தியத்திலும் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, தற்கால இளம் விவசாயிகளுக்கு பழக்கமில்லாத பாரம்பரிய விவசாய முறைகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உழவு செய்ய மாடுகளைப் பயன்படுத்துவதில் அதிக உடல் உழைப்பு தேவை. மராத்வாடாவின் 47-49 லட்சம் ஹெக்டேர் காரிஃப் விவசாய நிலங்கள் முழுவதும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டின் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் டிராக்டர்களின் பயன்பாடு அதிகரித்ததால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் உழவு மாடுகளை விற்றுவிட்டனர்.

இதனால், தற்போது மாடுகளை வைத்திருக்கும் ஒரு சில விவசாயிகளுக்கு திடீரென பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. கடும் கோடை வெயிலும், அதிகப்படியான உடல் உழைப்பும் இருப்பதால் பருவமழைக்கு முன்பு நிலங்களை தயார்படுத்தும் பணி தாமதமாகி இருக்கிறது. இந்த நவீன எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் பாரம்பரிய விவசாய முறைக்கு தள்ளி இருக்கிறது. ஆனால் 40°C-க்கும் அதிகமான கோடை வெப்பத்தில், மறந்துபோன பழைய முறைகளை மீண்டும் பின்பற்றுவது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று என விவசாய சங்கத் தலைவர் ஜெயாஜி சூர்யவன்ஷி வலியுறுத்துகிறார். அத்துடன் விவசாயிகளுக்கு எனத் தனியாக டீசல் ஒதுக்கீடு (Diesel Quota) வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *