திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் பள்ளிக்கட்டிடம் திறக்கும் விழா ஒன்றில், மேயர் பிரியாவால் தவெக எம்.எல்.ஏ பல்லவி புறக்கணிக்கப்படதாக செய்தி வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

புளியந்தோப்பில் பள்ளிக் கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சியில் மேயர் தன்னை புறக்கணித்துவிட்டதாக கூறி தவெக எம்.எல்.ஏ பல்லவி பாதியிலேயே வெளியேறியிருக்கிறார். நிகழ்வில் என்ன நடந்தது என விசாரிக்க பல்லவியை தொடர்புகொண்டோம். ‘திரு.வி.க நகரில் திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளை தாண்டி தளபதியின் ஆசியால் நான் வென்றிருக்கிறேன்.
நிறைமாத கர்ப்பிணியாகத்தான் பிரசாரத்தை மேற்கொண்டேன். எனக்கு குழந்தை பிறந்தே ஒரு வாரம்தான் ஆகிறது. இந்நிலையில், வார்டு 73 மற்றும் 75 இல் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை திறக்கவிருப்பதாக கூறி மண்டல அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்தது. எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ரொம்பவே மகிழ்ச்சியாக தயாராகியிருந்தேன். என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், விளக்கேற்றும் போது அவர் வேண்டுமென்றே என்னை புறக்கணித்தார். அவர் விளக்கேற்றியவுடன் அப்படியே துணை ஆணையரிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தவர் அதன்பின் வார்டு கவுன்சிலரிடம் மெழுகுவர்த்தியை கொடுத்துவிட்டார். முதலில் அவர் வேண்டுமென்றே செய்தார் என நான் நினைக்கவில்லை. கூட்டத்தில் எதோ மறந்துவிட்டார் என்றுதான் எண்ணினேன்.
ஆனால், இரண்டாவது பள்ளியிலும் இதையேதான் செய்தார். நான் மெழுகுவர்த்தியை வாங்க கையை நீட்டிய போதும் அவர் என்னிடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்று தெரிந்தது. உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டேன். தேர்தல் முடிவுகளால் இவர்கள் எங்கள் மீது கடுப்பில் இருப்பதைப் போல தெரிகிறது. அதற்காக மக்கள் நலத்திட்டங்களின் ஈகோ பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்?

இப்படித்தான் 72 வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணன், ‘ஓட்டுப் போட்ட விஜய்க்கிட்ட போயி எல்லாத்தையும் கேளுங்க’ என்று அநாகரிகமாக பேசி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதற்காகவெல்லாம் நான் ஓய்ந்துவிடமாட்டேன். மக்களுக்காக என்றைக்கும் களத்தில் நிற்பேன். உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பற்ற தன்மையை முதல்வரிடம் எடுத்து செல்வேன்’ என்றார்.
‘அரசு நிகழ்வுகளில் இதுதான் புரோட்டோக்கால். ஐ.ஏ.எஸ் அதிகாரி விளக்கு ஏற்றிய பிறகுதான் எம்.எல்.ஏ ஏற்ற வேண்டும். இது தெரியாமல் அவர் கோபித்து செல்கிறார்’ என மேயர் பிரியா விளக்கம் சொல்கிறார்.