பொறுப்பு அமைச்சர் நியமனத்தில் பாரபட்சம்….விழுப்புரம் மாவட்டத்திற்கு வன்னி அரசு அமைச்சர் இல்லையா? – Kumudam

Spread the love

க டந்த ஆட்சியில் தி.மு.க. அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சரை நியமித்ததுபோல, தற்போது த.வெ.க.வும் நியமித்துள்ளது. அதன்படி திண்டிவனம் வி.சி.க. எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரான வன்னி அரசை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளது

இதுகுறித்து த.வெ.க மற்றும் வி.சி.க.வின் உள்வட்டாரங்களுடன் தொடர்புடையவர்களிடம் பேசினோம். “கடந்த திமுக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சரை
அப்போதைய முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். அமைச்சர் இல்லாத சில மாவட்டங்களில் வேறு மாவட்டங்களில் உள்ள சீனியர் அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தனர்.

அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதுபோலவே கடலூரில் இரண்டு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் இருந்தபோது, பன்னீர்செல்வத்தை தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரை திமு.க.அரசு நியமித்தது. உடனே ‘சாதியை வைத்து நியமித்துள்ளனர் என அப்போது பரபரப்பானது. தற்போது தவெக அரசு, ‘சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது என சொல்லிக்கொள்ளும் நிலையில், கடலூரைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமாரை தருமபுரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக நியமித்திருப்பது. திமுக செய்ததுபோல சாதியரீதியாகவே தெரிகிறது

அதாவது தருமபுரி மாவட்டத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கே ஒரு வன்னியரை போட்டால்தான் அந்த மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியும். கடலூர் அமைச்சர் ராஜ்குமாரை வேறு மாவட்டத்திற்கு மாற்றிவிட்டு, அவரது மாவட்டத்தில் சென்னை அமைச்சரான புஸ்ஸி ஆனந்தை பொறுப்பு அமைச்சராக நியமித்து இருக்கிறார்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ராஜ்குமார் உத்தரவுக்கு கட்டுப்படுவார்களா, ஆனந்த் உத்தரவுக்கு கட்டுப்படுவார்களா? இதேபோலவே. வன்னி அரசு விழுப்புரம் மாவட்ட அமைச்சராக உள்ள நிலையில் அங்கேயும்
பொறுப்பு அமைச்சர் புஸ்ஸிதான்.

வன்னி அரசு கள்ளக்குறிச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் என்றால் அதிகாரிகள் மட்டத்தில் நிச்சயம் குழப்பம் உருவாகும் என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ளாதது ஏன்? அதோடு அரியலூர் மாவட்டத்திற்கும் ராஜ்குமாரை பொறுப்பு அமைச்சராக போட்டுள்ளனர். திமு.கவில் அரியலூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கவுன்டர் கொடுக்கும் விதமாகத்தான் நியமித்திருக்கிறார்கள் என அனைவராலும் பேசப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை போட்டதும் இப்படித்தான். இங்கே தி.மு.க.வில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவரும் நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆராசாவுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரையே கொண்டு வந்துள்ளனர்’ என பொதுவெளியில் பகிரங்கமாக பேசுகிறார்கள்

பெரம்பலூர் மாவட்டம் என்பது பெரம்பலூர், குன்னம் என ஒன்றரை சட்டமன்றத் தொகுதியும், அரியலூர் மாவட்டம் என்பது அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னத்தில் பாதி என இரண்டரை சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. ஆக மொத்தமாக நான்கு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு அமைச்சரை போட்டிருப்பது சரியானதல்ல. ‘இதற்கு பதிலாக இங்கே ஒருவரை போட்டுவிட்டு மற்றொருவரை பிரச்னை இல்லாத மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சராக போடுங்கள்’ என தவெகவினரே சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், ‘வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளரும் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு, த.வெ.சு. கூட்டணி அமைச்சரவையில், சமூகநீதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய மாவட்டமாகும். அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு வன்னி அரசைபொறுப்பு அமைச்சராக நியமிக்காமல் நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அவரை பொறுப்பு அமைச்சராக நியமித்திருப்பது சரியானதல்ல. இது பாகுபாடு காட்டுவதாகவே தெரிகிறது.

இதுபோக விழுப்புரம் மாவட்டத்திற்கு வேறொருவரை, அதுவும் சென்னையில் இருந்து புஸ்ஸி ஆனந்தை பொறுப்பு அமைச்சராக போட்டுள்ளார்கள் அதற்கு பதிலாக விழுப்புரம். மாவட்ட அமைச்சரையே விழுப்புரம் மாவட்டத்திற்கு போட்டால் நன்றாக இருந்திருக்கும். தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் விடுதலைச் சிறுத்தைகள் வலுவாக உள்ள பகுதியாகும். அப்படிப்பட்ட எங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தந்து நான்கு தொகுதிகளுக்குள் எங்களை முடக்குவது சரியாக இருக்காது என்று அக்கட்சியின் பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.பாலாஜி கருத்து தெரிவித்திருப்பது தவெசு வட்டாரங்களை அதிரவைத்திருக்கிறது’ என்றார்கள்.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.வும் வி.சி.க மாநிலப் பொருளாளருமான எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம். ‘எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த பொறுப்பு அமைச்சர் தேவையில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகத்தை ஆய்வு செய்ய ஓர் அமைச்சர் தேவைப்படுகிறார். மக்கள் நலத் திட்டங்களை எந்தெந்த பகுதிகளில் கொண்டுசேர்க்க வேண்டும் என முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த பொறுப்பு அமைச்சர் நியமனம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் வெற்றிபெற்ற அமைச்சர் வன்னி அரசை அதே மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கடலூருக்கோ, கள்ளக்குறிச்சிக்கோ இருக்கும்” என்றார்.

பொறுப்பு அமைச்சர் விவகாரத்தில் பொறுப்போடு நடந்துகொள்வார்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *