திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இதனிடையே அந்த வாகனத்தை ரவிக்குமார் தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதாக ருஜைனா பாத்திமாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று, பொள்ளாச்சியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இது குறித்து ரவிக்குமார் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபதி (52) என்பவர் விசாரணை நடத்தி வந்தார். அப்போது ருஜைனா பாத்திமா மற்றும் அவரது கணவரின் மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளார். பின்னர் பூபதி கோவை காட்டூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த புகாரை முடித்து வைக்கவும், மொபைல் போன்களை திரும்ப ஒப்படைக்கவும் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ருஜைனா பாத்திமா கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ருஜைனா பாத்திமா, சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதியிடம் நேற்று வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதியை கையும், களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச வழக்கில் காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.