Tamilnadu
oi-Vignesh Selvaraj
தென்காசி: தவெக நிர்வாகிகள் ஆய்வுக்குச் செல்கிறேன் பேர்வழி எனக் கிளம்பி, தற்போது அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றாலும் அவர்கள் தவெகவினர் என நினைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அப்படித்தான், தென்காசியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரைப் பார்த்து, “நீங்க TVK தானே?” எனக் கேட்டு அதிர வைத்துள்ளார் குடிமகன் ஒருவர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா முமுவதும் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி பல்வேறு இடங்களில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்தவகையில், கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் சுகாதார வளாகத்தை பார்வையிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், சுகாதார வளாகத்தை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒருவர், மாவட்ட ஆட்சியரை பார்த்து, “இங்கு ஐந்து ரூபாய்க்கு பதிலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. உங்களால கேட்க முடியுமா? உங்க பதில் இருக்கா” என்று திரும்பத் திரும்ப கேட்டார். “நான் பப்ளிக் உங்களிடம் கேட்பேன்” எனக் கூறிய அவர் திடீரென கலெக்டரைப் பார்த்து “நீங்க தவெக கட்சி நிர்வாகி தானே?” என கேட்டார்.

இதனால் ஷாக் ஆன அங்கிருந்தவர்கள், “யோவ்.. அவர் கலெக்டர்யா” என்று கூறியதும் “நீங்க கலெக்டர் தான்” என்றவாறே நின்றார். தொடர்ந்து, “என்னை எதற்கு வீடியோ எடுக்கிறார்கள்” என போதையில் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த போலீசார் அந்த போதை வாலிபரை அப்புறப்படுத்தினர்.