போதைப்பொருள் மாஃபியாயின் வெறியாட்டம்? 19 கைதிகள் பலி – இலங்கை நீர்கொழும்பு சிறையில் நடப்பது என்ன?

Spread the love

இலங்கையின் கடலோர நகரமான நீர்கொழும்பில் உள்ள சிறைச்சாலை, தற்போது ரத்தமும் சதையுமாக சிதறிக்கிடக்கும் ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்து, இதுவரை 19 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. சிறைக்குள் அதிகாரம் செலுத்தும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு இடையேயான யுத்தமே இந்த கோர சம்பவத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த இலங்கையையும் இந்த நிகழ்வு அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அளவுக்கு அதிகமான கைதிகளைக் கொண்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சிறியதாகத் தொடங்கிய வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. பின்னர் சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. ஆனால், திங்கள்கிழமைதான் பேரவலம் அரங்கேறியது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள், சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கை உடைத்துத் துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து சிறை வளாகம் துப்பாக்கிச் சூடுகளால் அதிர்ந்தது. கைதிகள் ஒருவரையொருவர் சுட்டுத் தள்ள, சிறைச்சாலை ரத்த ஆறாகக் காட்சியளித்தது.

சிறைச்சாலை

இந்த பயங்கர மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்த வன்முறைச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீர்கொழும்பு மருத்துவமனையின் இயக்குநர் புஷ்பா கம்லத் உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த புள்ளிவிவரங்கள், சிறைக்குள் நடந்த வன்முறையின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இந்த ரத்தவெறித் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பது யார்? முதற்கட்ட விசாரணைகளின்படி, சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் ஒரு குழுவிற்கும், அதனை எதிர்க்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியே இந்த வன்முறைக்கு மூல காரணம் என்று தெரியவந்துள்ளது. சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைத் திருத்தும் இடமா அல்லது குற்றச் செயல்களின் தலைமையகமா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. சிறைக்குள் ஒரு மாஃபியா கும்பல் ஆயுதங்களைக் கைப்பற்றும் அளவுக்கு நிலைமை சென்றது எப்படி என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை (STF) மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சிறைச்சாலை முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அமைதியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, கலவரத்தில் ஈடுபட்ட மூன்று முக்கிய கைதிகள் பல்லன்சேன சிறை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தற்காலிக தீர்வுதானா அல்லது நிரந்தர அமைதிக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையர் ஜெனரலின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு பிரத்யேக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். கலவரத்திற்கான மூல காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து இந்தக் குழு விரிவாக விசாரிக்கும். இதற்கிடையே, காவல்துறை சார்பிலும் ஒரு தனி விசாரணை நடைபெற்று வருகிறது. நீதித்துறை அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இந்த மோதல் குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையே சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.

அதிகாரிகளின் அறிக்கைகள், விசாரணைக் குழுக்கள் என நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *