மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்.
மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் இருந்த கேண்டீனில் உணவுப்பொருள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை என்று கூறி அதன் லைசென்ஸை ரத்து செய்துள்ளார்.
துகாராம் முண்டேயின் செயலால் அனைத்து உணவகங்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா மக்களின் பிரத்யேகமான விருப்ப உணவாகக் கருதப்படும் வடாபாவ்களை பள்ளி அருகில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளார்.
உப்பு மற்றும் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அதிகமுள்ள இந்த வகை உணவுபொருட்கள் மாணவர்களின் உடல் நலத்திற்கு எதிரானது என்று கூறி அவற்றை பள்ளியில் விநியோகம் செய்யவும் தடை விதித்து இருக்கிறார்.
துகாராம் முண்டேயின் புதிய உத்தரவுப்படி அதிக கொழுப்பு, டிரான்ஸ்-ஃபேட் (trans-fat), சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட உணவுகள் (பொதுவாக HFSS உணவுகள் என அழைக்கப்படுபவை) இனி பள்ளி வளாகத்திற்குள்ளோ அல்லது பள்ளியைச் சுற்றியுள்ள 50 மீட்டர் சுற்றளவிலோ விற்பனை செய்யப்படவோ, இலவசமாக வழங்கப்படவோ அல்லது விளம்பரப்படுத்தப்படவோ கூடாது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், உறைவிடப் பள்ளிகள் அல்லது வேறு ஏதேனும் வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் என மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும்.
இந்த உத்தரவு சுமார் 1.08 லட்சம் பள்ளிகளையும், ஏறக்குறைய இரண்டு கோடி மாணவர்களையும் உள்ளடக்கியதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவின் கீழ், வடா பாவ், சமோசா, வறுத்த தின்பண்டங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், சர்க்கரை பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்கள் பள்ளிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள 50 மீட்டர் தூரத்திற்குள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.