மதுபாட்டில், மோசமான உணவு: புகார்களை அடுக்கிய மாணவர்கள் – தன் போன் நம்பரை கொடுத்துச் சென்ற அமைச்சர்

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 224 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில்  46 பேர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று இந்த அரசு கள்ளர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அமைச்சர் தனது ஆய்வின் போது, தலைமை ஆசிரியர் அறை, மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் பள்ளி விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் விடுதியில் உள்ள கழிப்பறைகள், வகுப்பறைகள், மாணவர் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் இறுதிக்கட்டமாக, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் குறைகளைக் கேட்டார். அப்போது  “விடுதியில் குடி தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்காக வெளியிலிருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. ஆண்கள் விடுதி வார்டன், விடுதிக்குள்ளேயே மதுபான பாட்டில்களை அடுக்கி வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் மாணவர்களுக்குத் தெரியாமல் மது அருந்தி வருகிறார்.

பெண்கள் விடுதிக்கான வார்டன் முறைப்படி பணிக்கு வருவதில்லை. அமைச்சர் ஆய்வு செய்ய வருவது தெரிந்து கொண்டு தினம் தான் அவர் பணிக்கு வந்துள்ளார்.  அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் சரிவர வழங்கப்படுவதில்லை.

காலவதியான பொருள்கள் அதிக அளவில் கொடுக்கின்றனர். விடுதியில் தினமும் வழங்கப்படும் உணவு மிகவும் மோசமானதாக உள்ளது. ஆனால், இன்று அமைச்சர் ஆய்வுக்காக வருகிறார் என்பதால், வெளியில் இருந்து வேறு ஒரு சமையல்காரரை வைத்து அவசர அவசரமாகச் சமைத்துள்ளனர் “ என அமைச்சரிடம்  அடுக்கடுக்கான புகார்களைக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்த புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வார்டன் ஆகியோரிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் இவை அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்ததோடு,  அங்கு உள்ள மாணவர்களுக்கு தனது தொலைபேசி எண்ணை கொடுத்து ‘இதே பிரச்சனை மீண்டும் தொடர்ந்தால் தன்னை தொடர்பு கொள்ளும்படி’ தெரிவித்து சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *