பேருந்து நிலையம், பள்ளிக் கல்லூரிகள், கோயில்கள், மசூதி, தேவாலயங்களுக்கு அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அதே இடங்களில் மனமகிழ் மன்றங்கள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் மது குடிப்போர் அங்கு சென்று குடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை கோ.புதூர் பகுதியில் எப்.எல்.2 அனுமதி பெற்று ஒரு மனமகிழ்மன்றம் செயல்படுகிறது. அங்கு மதுபான விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

நேற்று காலை மன மகிழ் மன்றத்தில் மது வாங்குவதற்கு ஏராளமானோர் கூடியதால் அந்தப் பகுதியே பரபரப்பானது. ’உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அதனால் மது அருந்த வருபவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு வாருங்கள் உங்களை உறுப்பினாராக்கி விட்டு பின்பு மது கொடுக்கிறோம்’ என மனமகிழ் மன்றத்தினர் கூறியுள்ளனர். அலட்டிக் கொள்ளாத மது குடிப்போரும் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்து உறுப்பினராகி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர்.