இது குறித்து அங்கே சிலம்பக்கலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரிடம் கேட்டபோது, “என் வீடு இப்பூங்காவிலிருந்து ஐந்து தெரு தள்ளிதான் இருக்கிறது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் பூங்காதான் எங்கள் மைதானம். பள்ளி முடிந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் இங்குதான் இருப்போம். விடுமுறை விட்டால் போதும் இங்கு வந்துவிடுவோம். அதற்குப் பிறகு கொரோனா ஊரடங்கு வந்தது.
அப்பப்போ இந்தப் பக்கம் வந்து போவது உண்டு. ஐந்து வருடங்களாக இப்படியேத்தான் கிடக்கிறது. அப்போது விளையாடிய பசங்க யாரும் இப்போது இல்லை. இருந்த விளக்குகள் எல்லாம் உடைந்து கிடக்கின்றன. நாங்கள் விளையாடிய ஊஞ்சல், சறுக்கு மரம் எதையும் இப்போது காணவில்லை. பாதியாக உடைந்து, இருந்த இடம் தெரியாமல் இன்று இருக்கிறது. நிறைய பெற்றோர்கள், குழந்தைகள், முதியவர்கள் வருவார்கள். ஆனால் இப்போது யாரும் பெரிதாக இங்கு வருவதில்லை.
நானும் எங்கள் சிலம்பக்கலை பயிற்சிப் பட்டறை மாணவர்கள் 60க்கும் மேற்பட்டோரும் கடந்த 2 மாதங்களாக இந்தப் பூங்காவில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பூங்காவைச் சீரமைப்பு செய்து மாணவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக, பாதுகாப்பான இடமாக மாற்றிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்றார்.
இப்பூங்காவைச் சுற்றி திருமண மண்டபங்கள், கோவில், குடியிருப்புகள் மற்றும் பூங்காவிற்குப் பின்புறம் பள்ளி, மருத்துவமனை என பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டு இடங்கள் நிறைந்திருக்கின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பூங்காவினை மறுசீரமைப்பு செய்து, உரிய பராமரிப்போடும் பாதுகாப்பான சுற்றுச்சூழலோடும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அப்பகுதிவாழ் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.