பரிவாரத் தெய்வங்களாக பைரவர், இரட்டை விநாயகர்கள், சண்டிகேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நந்திதேவர், ஜேஷ்டாதேவி மற்றும் அஞ்சனா தேவி- ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.
இத்தலம் அனுமனின் அவதாரத்தோடு தொடர்புடையது என்று சொல்கிறார்கள். எனவே இத்தல ஆஞ்சநேயர், அஞ்சனா தேவி, விஸ்வகர்மா இவர்களை வழிபடுவது மிகவும் விசேஷம் என்கிறார்கள்.

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று, ஸ்ரீஐராவதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் ஸ்ரீமீனாட்சி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தின் முதல் வாரத்திலும் ஆடி மாதம் கடைசி வாரத்திலும் பிரதோஷ வழிபாட்டின்போது சூரியக் கதிர்கள், ஸ்ரீஐராவதீஸ்வரர் மீது விழுந்து பூஜிப்பது, கண்கொள்ளாக் காட்சி.
புராணப் பெருமைவாய்ந்த இந்தத் தலத்திலிருந்து மண் எடுத்துச் சென்றுதான் மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டினார்கள் என்கிறது தலவரலாறு. அந்த வகையில் இதுதான் ஆதி மீனாட்சி அம்மன் கோயில் என்றும் சொல்கிறார்கள். இங்கு வேண்டிக்கொள்ளும் யாவும் நிறைவேறுகிறது என்பது நம்பிக்கை.
இந்த ஐராவதீஸ்வரரை வணங்கி வழிபட்டால் தொல்லைகள் தீரும். திருமண வரம் வேண்டுபவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்கிறார்கள் ஆனையூர் பொதுமக்கள்.
மதுரையைச் சுற்றியிருக்கும் சிவத் தலங்களைத் தேடிச் சென்று தரிசிப்பது மிகவும் விசேஷம். அப்படிப்பட்ட தலங்களில் ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியமானது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வரம். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.