மதுரை : லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் – ’ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்’ | Madurai: Iron object falls from lorry – Tragic death of two ‘Jallikattu friends’

Spread the love

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.

பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் இணைந்து களமிறங்கி பரிசுகளையும் வென்றுள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு கோபாலும் அய்யனாரும் இருசக்கர வாகனத்தில் மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். நகரி பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புப் பகுதியில் வாகனங்கள் செல்லும்போது நிலைதடுமாறும் வகையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த நேரத்தில், அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரியிலிருந்து பெரிய இரும்புப் பொருள் ஒன்று திடீரென தவறி சாலையில் விழுந்துள்ளது. அந்த இரும்புப் பொருள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோபால் மற்றும் அய்யனார் மீது பலமாக மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி அங்கு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கனரக வாகனத்தை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த அய்யனார்

விபத்தில் உயிரிழந்த அய்யனார்

ஒரே கிராமம், நெருங்கிய நட்பு, ஜல்லிக்கட்டு களத்தில் இணைந்து வென்றவர்கள்… வாழ்க்கையிலும் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்திருப்பது சித்தாலங்குடி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நகரி பகுதியில் உள்ள சாலைத் தடுப்பு மற்றும் அங்கு நிலவும் போக்குவரத்து பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *