Business
oi-Vigneshkumar
சென்னை: கணவன்- மனைவி இருவரில் ஒருவர் மற்றொருவரைவிட அதிகம் சம்பாதித்தால்.. பொருளாதாரம் தொடர்பான முடிவுகள் சிக்கலாக மாறலாம். வெறுமான வீட்டு செலவுகளை யார் ஏற்க வேண்டும் என்பதில் தொடங்கி முக்கியமான நிதி முடிவுகளில் யார் எவ்வளவு தருகிறார்கள் என்பது வரை அனைத்திலும் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் தம்பதிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இப்போது விற்கும் விலைவாசியில் வீட்டில் ஒருவர் மட்டும் வேலைக்கு போய் குடும்பம் நடத்துவது எல்லாம் கிட்டத்தட்ட முடியாத ஒன்றாகிவிட்டது. இதனால் கணவன் மனைவி வேலைக்கு போவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இதுபோல தம்பதி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வருமானம் மாறலாம்!
ஆனால், இருவரின் வருமானமும் சமமாக இருப்பது அரிது. பதவி உயர்வு, தொழில், குழந்தை பிறப்பு இடைவெளி, தொழில் தொடங்குவது என பல்வேறு காரணங்களால், ஒருவரின் வருமானம் மற்றொருவரைவிட அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம். இதுபோன்ற சூழல்களில் என்ன செய்ய வேண்டும்.. பொருளாதார முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக வல்லுநர்கள் சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்கள்.
வீட்டு வாடகை, மளிகை செலவு, இஎம்ஐ உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இருவரும் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வதே சமத்துவம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது எப்போதும் சரியான தீர்வாக இருக்காது.
மனக்கசப்பு
உதாரணமாக ஒருவரின் மாத வருமானம் ரூ.2 லட்சமாகவும், மற்றொருவரின் வருமானம் ரூ.70 ஆயிரமாகவும் இருந்தால், இருவரும் சம அளவு செலவு செய்தால் குறைவாகச் சம்பாதிப்பவரால் சேமிக்கவே முடியாத நிலை உருவாகலாம். மறுபுறம் அதிகம் சம்பாதிப்பவரிடம் அதிக பணம் மீதமாக இருக்கும். கணக்கில் சமமாக இருந்தாலும் இது தம்பதிக்கு இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம்.
இதை சமாளிக்க வருமான விகிதத்திற்கு ஏற்ப குடும்பச் செலவுகளை பகிரும் முறையை பின்பற்றலாம். அதாவது அதிகம் சம்பாதிப்பவர் வீட்டு செலவில் அதிக பங்கை ஏற்கலாம்.. குறைவாக சம்பாதிப்பவர் அதற்கேற்ப குறைவாக பங்களிக்கலாம். ஒருவர் இவ்வளவு தான் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட விகிதம் இல்லை. ஒவ்வொரு குடும்பமும் தங்களது வருமானம், சேமிப்பு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப முடிவு செய்யலாம். இருவரும் பேசியே இதை முடிவு செய்ய வேண்டும்!
ஜாயிண்ட் அகவுண்ட்
சில தம்பதிகள் ஜாயிண்ட் அகவுண்டில் தங்கள் வருமானத்தை போட்டு வைப்பார்கள். சிலருக்கு இது வசதியாக இருந்தாலும், அனைவருக்கும் இது பொருத்தமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டு வாடகை, மின்கட்டணம், மளிகை செலவு போன்ற பொதுச் செலவுகளுக்காக மட்டுமே ஜாயிண்டு கணக்கைப் பயன்படுத்தலாம். இது தவிர இருவரும் தனிப்பட்ட சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பதும் அவசியம். அப்போது தான் குடும்ப செலவு முறையாக பக்கம் இருக்கும் அதேநேரம் தனிப்பட்ட செலவுகளுக்கு ஒவ்வொரு முறையும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஒருவரின் வருமானம் இன்று அதிகமாக இருந்தாலும், அது எப்போதும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தை பிறந்த பிறகு ஒருவர் வேலைக்கு இடைவெளி எடுக்கலாம். அதேபோல், மற்றொருவருக்குப் பதவி உயர்வு அல்லது அதிக சம்பளம் கிடைக்கலாம். எனவே, பணம் தொடர்பான ஏற்பாடுகளை நிரந்தரமானதாக கருதக் கூடாது. அவ்வப்போது நிலைமையை பொறுத்து இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ரொம்ப முக்கியம்
தம்பதிகளின் நிதி நிர்வாகம் என்பது வெறும் பட்ஜெட் கணக்கு போடுவது மட்டுமல்ல… செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்பதை வெளிப்படையாகப் பேசி தீர்ப்பதிலேயே அது இருக்கிறது. சூழலுக்கு ஏற்ப இருவரும் மாறிக் கொள்ள வேண்டும்.. இருவரும் சம அளவு பணத்தை செலவிட வேண்டும் என்பதை தாண்டி, இருவரில் யாருமே அதிக சுமையாக உணரக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்!


