India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும், அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைந்தது. பாஜக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அவரது கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் பாஜகவிற்கு தாவினர். இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியிடம் இருந்து பாஜகவிற்கு தாவியவர்களுக்கு அந்த கட்சி ‘அல்வா’ கொடுத்துள்ளது. மேற்கு வங்க அரசியலில் என்ன நடக்கிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. குறிப்பாக முதல்வராக போட்டியிட்ட மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டது.
மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த 58 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உள்பட 20 லோக்சபா எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனி அணியாக செயல்பட தொடங்கினர். இவர்கள் என்சிபிஐ எனும் இந்திய தேசியவாத மக்கள் கட்சி என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருவதோடு, பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியை விட்டு விலகி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்து. இந்த அதிர்ச்சி வைத்தியத்தை பாஜக தான் வழங்கி உள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கொல்கத்தா மாநகராட்சி மற்றும் ஹவுரா மாநகராட்சிக்கு துர்கா பூஜை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க மம்தா பானர்ஜியின் அதிருப்தி எம்பிக்கள் முடிவு செய்தனர். இதற்காக காய் நகர்த்தி வந்தனர். ஆனால் மேற்கு வங்க பாஜக தலைமையோ பாஜக தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளது.
இதுபற்றி மேற்கு வங்க மாநில பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சாரியா கூறுகையில், ”தேசிய அளவிலான கூட்டணி என்பது உள்ளாட்சி தேர்தலுக்கு பொருந்தாது. அதுமட்டுமின்றி மேற்கு வங்கத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு கூட்டணி கட்சிகள் என்று எதுவும் இல்லை. டெல்லியில் மத்திய பாஜக தலைமைக்கும் என்சிபிஐ (அதிருப்தி திரிணாமுல் எம்பிக்கள் செயல்படும் கட்சியின் பெயர்) இடையே புரிதல் இருக்கலாம். ஆனால் டெல்லிக்கும், கொல்கத்தாவிற்கும் இடையே 1,500 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இதனால் கொல்கத்தா மற்றும் ஹவுரா மாநகராட்சி தேர்தலை எங்களின் சொந்த பலத்தில் எதிர்கொண்டு வெற்றி பெற உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கொல்கத்தா மாநகராட்சி தேர்தலுக்கான பாஜகவின் மேற்பார்வை குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரிதேஷ் திவாரி கூறுகையில், ”
கொல்கத்தா மாநகராட்சியில் பாஜகவுக்கு எந்த பலமும் இல்லை. ஆனால் சட்டசபை தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றோம். கொல்கத்தாவில் உள்ள மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற தை்தனர். இதனால் அங்குள்ள 209 வார்டுகளிலும் நாங்கள் தனித்து போட்டியிட்டு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவோம்” என்றார். பாஜக தலைவர்களின் இந்த கருத்து மம்தா பானர்ஜியிடம் இருந்து விலகி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இருப்பினும் பாஜக ஆதரவு நிலைப்பபாட்டை எடுத்த எம்பிக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜக சார்பில் தங்களது ஆதரவாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். இதுபற்றி
மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து விலகி என்சிபிஐ கட்சி பெயரில் எம்பியாக செயல்பட்டு வரும் காகோலி கோஷ் தாஸ்டிதார்(மம்தா பானர்ஜியின் எம்பிக்களை தனி அணியாக வழிநடத்தி வருபவர்) கூறுகையில், ”நாங்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளில் ஒன்றாக உள்ளோம்.
இதனால் என்டிஏ கூட்டணி சார்பில் நாங்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்காக மேற்குவங்கத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுபற்றி பேசி முடிவெடுக்கப்படும்” என்றார். இவர் இப்படி கூறினாலும் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்கள் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினருக்கே அனைத்து வார்டுகளிலும் சீட் வழங்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர். என்ன நடக்கிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.