India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத தலைவியாக வலம் வந்த மம்தா பானர்ஜிக்கு தற்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது. அவரது சின்னம், கட்சியின் பெயர் முடக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில் மம்தா நிறுத்திய ஒரு வேட்பாளர் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். இன்னொரு வேட்பாளர் இன்று வேட்புமனுவை வாபஸ் வாங்குவதாக அறிவித்த நிலையில் மம்தா பானர்ஜி போராடி அவரை சமாதானம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த மம்தா பானர்ஜி. 2011 முதல் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி சமீபத்திய சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தல் தோல்வி மம்தா பானர்ஜிக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. பரம எதிரியாக இருக்கும் பாஜக முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்ள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டாலின் போல் மம்தா பானர்ஜியும் தோற்கடிக்கப்பட்டார்.
இதுமட்டுமின்றி அவரது கட்சி 2 ஆக உடைந்தது. மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு அணியினரும், அரூப் ராய் தலைமையில் இன்னொரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் உள்ளிட்ட சட்டசபை

தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ரிசல்ட் வெளியாக
உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 2 அணியினரும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதோடு இருவரும் கட்சி, சின்னத்துக்கு உரிமை கோரியதால் திரிணாமுல் காங்கிரஸ் எனும் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு அணிகளும் வேறு சின்னம், கட்சியின் பெயரில் களமிறங்க உள்ளது. மம்தா பானர்ஜி அணி ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் கால்பந்து வீரர் சின்னத்திலும், அரூப் ராய் என்பவர் தலைமையிலான அணி வேட்பாளர் ‘டெமாக்கிரட்டிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் ‘கடிதம்’ சின்னத்திலும் போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே மம்தா பானர்ஜி அணி சார்பில் நந்திகிராம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சன்சிதா பிரதான் டீ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இவர் மேற்குவங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்த நிலையில் தனது வேட்புமனுவை நேற்று வாபஸ் பெற்றார். மம்தா பானர்ஜியை நம்ப வைத்து அவர் கழுத்தறுத்த நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். தற்போது காங்கிரஸ் வேட்பாளரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்படி மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி விழுகிறது.
அந்த வகையில் இன்று காலையிலேயே பெரிய சம்பவம் நடந்து மம்தா பானர்ஜியை தவிக்கவிட்டது. அதாவது
இன்று காலையில் ரெஜிநகர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அணியில் போட்டியிடும் ரபியூல் ஆலம் சவுத்ரி பெரிய குண்டை தூக்கி போட்டார். தேர்தலில் போட்டியிடவில்லை. இன்று வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள். இதனால் இன்றைய தினம் வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளேன் என்று அறிவித்தார். ஏற்கனவே நந்திகிராமில் மம்தா பானர்ஜி நிறுத்திய வேட்பாளர் சன்சிதா பிரதான் டீ தனது வேட்புமனுவை நேற்று வாபஸ் வாங்கிய நிலையில் இது பெரிய அடியாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து மம்தா பானர்ஜி, வேட்பாளர் ரபியூல் ஆலம் சவுத்ரியை சமாதானம் செய்தார். 3 மணிநேரம் நடந்த சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரபியூல் ஆலம் சவுத்ரி தனது மனநிலைமை மாற்றினார். இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அணி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ”கட்சியில் இரண்டு அணிகள் செயல்படுகிறது. இதனால் புதிய சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை உடனடியாக வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சென்று ஓட்டு பெறுவது சவாலான காரியம்.இதனால் தான் நான் வேட்புமனுவை வாபஸ் வாங்க முடிவெடுத்தென். நான் மம்தா பானர்ஜியிடம் பேசினேன். அப்போது அவரை முடிந்தவரை போராடுவோம் என்றார். இதனால் தேர்தலில் போட்டியிட உள்ளேன். என்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம். வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என யாரும் எனக்கு அழுத்தரம் தரவில்லை” என்றார்.
தற்போது ரெஜிநகர் வேட்பாளர் ரபியூல் ஆலம் சவுத்ரி தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்தாலும் கூட அவரது திடீர் முடிவால் மம்தா பானர்ஜி நொந்துபோனார். அதுமட்டுமின்றி சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது கட்சியினர் செய்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்து எப்படி இருக்கு ஆள்? இப்போது இப்படி பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறாரே? என்று கவலையை பகிர்ந்து வருகின்றனர்.