India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நந்திகிராம் இடைத்தேர்தல் களம் நொடிக்கு நொடி தொடர்ந்து பரபரப்பாகி வருகிறது. மம்தா தரப்பு வேட்பாளர் வாபஸ் வாங்கிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய கொலை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி இந்த நந்திகிராம் இடைத்தேர்தலில் மிலன் பிரதானுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இப்போது நந்திகிராம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு போட்டியிட்டு வென்ற சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் பாஜக, காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டியே அங்கு நிலவி வந்தது.

நந்திகிராம் இடைத்தேர்தல்
நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா அணியின் சார்பில் சஞ்சிதா பிரதான் டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் வியாழக்கிழமை இரவு மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்ததாக தெரிகிறது. அதையடுத்து வெள்ளிக்கிழமை அவர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நந்திகிராம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், மம்தா தரப்பால் மாற்று வேட்பாளரை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கைது
இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது அணி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மிலன் பிரதானை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். இது அங்கு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
பழைய கொலை வழக்கு
மம்தா பானர்ஜி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மிலன் பிரதான் பழைய கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே இருந்த கொலை வழக்கின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கும், மம்தா அணி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அதேபோல் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாரோ அது குறித்து தெளிவாக தகவல் இல்லை.
நந்திகிராம்
நந்திகிராம் தொகுதியை பொறுத்தவரை அது கடந்த சில தேர்தல்களாக மேற்கு வங்க அரசியலில் முக்கியமானதாக இருந்து வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி இத்தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். பின்னர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு சென்றார்.
இந்த முறை சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டதோடு மம்தாவின் பவானிபூர் தொகுதியிலும் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நந்திகிராம் தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மம்தாவின் வேட்பாளர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அங்கு இப்போது பாஜக வேட்பாளர், மற்றொரு திரிணாமுல் கோஷ்டி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

