மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில், மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த மே 20 அன்று, மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகரிடம் சோவன்தேப் சட்டோபாத்யாயவை எதிர்க்கட்சித் தலைவராகப் பரிந்துரைத்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்தில் தங்களது கையெழுத்துக்கள் போலியாகப் போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களான ரிதாபர்தா பானர்ஜி மற்றும் சந்திபன் சஹா ஆகியோர் புகார் கூறினர். இந்த புகாரைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த மோசடி புகார் தொடர்பாக கொல்கத்தாவின் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டு, பின்னர் இந்த வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு சிஐடி தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி நேரில் ஆஜராகாமல், விசாரணைக்கு 15 நாள்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொல்கத்தாவின் ’30B, ஹரிஷ் சாட்டர்ஜி தெரு’ பகுதியில் அமைந்துள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்திற்குச் சென்ற சிஐடி அதிகாரிகள், இந்த முகவரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாகவும் செயல்படுவதால், வளாகத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்கு அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே சில நிமிடங்கள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், இறுதியாக சிஐடி குழுவினர் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி
அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷிஷ் சக்ரவர்த்தி கூறுகையில், “தற்போது மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியோ வீட்டில் இல்லை. எனவே, அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இருக்கும்போது, ஓரிரு நாள்கள் கழித்து வருமாறு அதிகாரிகளிடம் கோரினோம். ஆனால், சிஐடி அதிகாரிகள் இதனை மறுத்ததோடு நான் இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *