வீட்டில் உணவு தயாரிப்பு
“எல்லாரும் இப்போ வீட்டில் எல்லாத்தையும் செய்து சாப்பிடுவது குறைந்து வருகிறது. சீக்கிரமாக தயாரித்து சாப்பிடக்கூடிய உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால் நல்ல பொருள்களை நாங்களே வீட்டில் தயாரித்து மக்களிடம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம்.
அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. மூன்றரை ஆண்டுகளாக எங்களிடம் வாங்கும் நிரந்தர வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் நம்பிக்கையுடன் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். நாங்கள் கொடுக்கும் உணவுப் பொருள்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் சேர்ப்பதில்லை.
உணவு நிறமிகளோ, பிரிசர்வேட்டிவ்களோ பயன்படுத்துவதில்லை. செக்கு நல்லெண்ணெய், அச்சு வெல்லம் மற்றும் இயற்கையான பொருள்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். கறுப்பு உளுந்து களி, பல்வேறு வகையான லட்டு, உருண்டைகள், அல்வாக்கள், கட்லெட்டுகள், தொக்கு, ஊறுகாய், வடகம் மற்றும் பொடி வகைகள் என பல பாரம்பர்ய மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்” என்கிறார் கிஷோர் பாபு.

“கருப்பு உளுந்து களி கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலிக்கு ரொம்ப நல்லது. அதுல செக்கு நல்லெண்ணெய், அச்சு வெல்லம் தான் பயன்படுத்துறோம். அதே மாதிரி அசோகா அல்வாவுல கலர் எதுவும் பயன்படுத்துறது கிடையாது.
பாசிப்பருப்பு, நெய், குங்குமப்பூ சேர்த்து தயாரிக்கிறோம். இளநீர் அல்வா, கேரட் அல்வா, மாம்பழ அல்வா, தேங்காய்ப்பால் அல்வா, புரோட்டீன் அல்வா, வாழைப்பழ அல்வா மாதிரி பல வகையான அல்வாக்களும் இருக்குது. கட்லெட்டுல மரவள்ளிக்கிழங்கு காரம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஸ்வீட் ரெண்டு வகையும் இருக்கு.
அதையும் எண்ணெயில் பொரிக்காம தோசைக்கல்லுல சுட்டுத்தான் தயாரிக்கிறோம். அதே மாதிரி எள்ளு உருண்டை, கடலை உருண்டை, மல்டிகிரைன் லட்டு, கருப்பு உளுந்து லட்டு, மாலட்டு, தேங்காய் பர்பி, தக்காளி தொக்கு, புளிக்காய்ச்சல், ஆவக்காய் ஊறுகாய், வடகம், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி என பல பாரம்பர்ய உணவுப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
இவை அனைத்தும் நல்ல பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன” என்கிறார் கிஷோர் பாபு.