படம் OUT..பாட்டு HIT! – வி.ராம்ஜி
’இளமை இதோ இதோ, இனிமை இதோ இதோ’ என்கிற ‘சகலகலா வல்லவன்’ பாடல் இன்றைக்கும் பிரபலம். ஆனால், ‘இளமை இதோ இதோ’ எனும் தலைப்பிலும் ‘இனிமை இதோ இதோ’ என்ற தலைப்பிலுமாக வெளியான படங்களில் இளமையுமில்லை; இனிமையுமில்லை. ‘என்னது… இந்தத் தலைப்புல படம் வந்துச்சா? யார்கிட்ட கதை விடுறே’ என சினிமா வெறியர்கள் பந்தயமே கட்டுவார்கள். ‘இனிமை இதோ இதோ’ படத்துச் சாட்சியாக இந்தப் பாடல் இன்றைக்கும் பலராலும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் ‘அள்ளி வச்ச மல்லிகையே, புள்ளி வச்ச பொன்மயிலே!’ பாட்டு!
சந்திரசேகர், நிஷா என பலரும் நடித்திருந்தார்கள். சந்திரசேகர் எனும் அற்புத நடிகரை நமக்குத் தெரியும். நிஷா எனும் நடிகை, ‘எனக்காகக் காத்திரு’ படத்திலும் ‘டிக் டிக் டிக்’ படத்திலும் என சொற்ப படங்களின் மூலமாகத் தெரியும். சொல்லப்போனால், சில படங்களில் தான் நடித்தார். இன்னொரு நாயகனாக ராஜேந்திர பிரசாத் எனும் நடிகர் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் சக்கைப்போடு போட்ட ஹீரோ. காமெடியிலும் கலக்குபவர் இவர்!
’வாம்மா மின்னல்’ என்பதுபோல், படம் வந்துவிட்டு விருட்டென தியேட்டரை விட்டுச் சென்றுவிட்டது. ஆனால் பாடல்களின் மூலம், தமிழ்ச்சினிமா சரித்திரப் பக்கங்களில் ஒருவரியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்.
இளையராஜா கிராமத்து மெலடியில் உருகவைத்திருப்பார். கிருஷ்ணசந்தர் எனும் அருமையான பாடகர் பி.சுசீலாவுடன் இணைந்து பாடி அசத்தியிருப்பார். வைரமுத்து எழுதிய ஹிட் பாடல்களின் பட்டியலில் இந்தப் பாடலும் உண்டு! பாடலுக்கு முன்னதாக, புல்லாங்குழலை காதலை உணர்த்துவார் இளையராஜா. அடுத்து குழலுடன் கிடாரும் சேரும். பிறகு தபேலா விளையாடும்.
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
அள்ளி வச்ச மல்லிகையே…ம்…ம்…ம்
புள்ளி வச்ச பொன்மயிலே…ம்…ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
அள்ளி வச்ச மல்லிகையே…ம்…ம்…ம்
புள்ளி வச்ச பொன்மயிலே என்று கிருஷ்ணசந்தர் குரல், காதலும் மென்மையான மனசும் உணர்த்தும். கிருஷ்ணசந்தரை இளையராஜா தவிர, எவரும் சரியாகப் பயன்படுத்தவில்லை எனும் வருத்தமும் கோபமும் உண்டு எனக்கு. அவரிடமே இதைச்சொல்லியிருக்கிறேன்.
ஓ ராமனே…உன் ஆசை மெய்யானதா
ஏ பூங்கொடி…இந்த பூமி பொய்யானதா
காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
தங்க நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா
நம்பித்தானே வந்து விழுந்தேனே
’சும்மா ஆசைவார்த்தை சொல்லாதே, வார்த்தை எனக்கு வாழ்க்கையாகுமா’ என்று காதலி கேட்கிறாள். ‘பேச்சின் நிறமும் குணமும் மாறிவிடுமா, தங்கத்தின் நிறம் கருத்துவிடுமா’ என்று உறுதியளிக்கிறது காதல். ‘நம்பித்தானே வந்துவிழுந்தேனே’ என காதலுக்குள் விழுகிறாள் காதலி. வைரமுத்து ஜாலம், எப்போதும் வைரமும் முத்துவும் கலந்த காதல் கோர்வைதான்!
ஆகாயமும்…இந்த மண்ணும் சாட்சியடி
யார் கேட்டது…மனசாட்சி போதும் இனி
பாதம் நோகும்போது உள்ளங்கையால் தாங்கவா
பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா
வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா
உவம வேணாம் உண்மை சொல்லு மாமா
மண்ணும் விண்ணும் சாட்சி என்கிறான் அவன். மனசாட்சிதான் முக்கியம் என்கிறாள் அவள். ‘உன்னை உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன்’ என்கிறாள். ‘ஐய்… டூப்பு’ என கேலி செய்கிறாள் அவள். வெண்ணிலவையும் நட்சத்திரத்தையும் துணைக்கு அழைக்கிறான். ‘இந்த உவமையெல்லாம் வேணாம், நேரடியாச் சொல்லு’ என்கிறாள். கிராமத்தின் வெள்ளந்தித்தனத்தையும் காதலுக்குள் வரவேண்டிய பேரன்பையும் அன்பின் மூலம் வரக்கூடிய நம்பிக்கையையும் சொல்லியிருக்கும் பாடலுக்கு, இளையராஜா போட்ட டியூன், காதலர்களின் விருப்பப்பாடலாகவே ஆனது.
அள்ளி வச்ச மல்லிகையே…ம்…ம்…ம் எனும் போது அந்த ‘ம் ம் ம்’ நம்மை மயக்கிப்போடும். புள்ளி வச்ச பொன்மயிலே என்பதை அடுத்து ‘ம் ம் ம்’ என்று நம்மை சொக்கவைக்கும். இன்று இரவு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி, ‘அள்ளி வச்ச பொன்மயிலே’ பாடலைக் கேளுங்கள். கிருஷ்ணசந்தரும் சுசீலாவும் உங்களைக் கட்டிப்போட்டுவிடுவார்கள். தன் வரிகளுக்குள் வைரமுத்து உங்களை மீண்டும் வாழச் செய்வார். இளையராஜா நமக்கு புதுப்பிறவியே கொடுத்திருப்பார்!

