ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தில், ஒரு சிறிய அணிலின் விசித்திரமான நடத்தை ஒட்டுமொத்த வளாகத்தையே திகைக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்களைக் கண்டாலே மர உச்சிக்கு ஓடும் அணில்களுக்கு மத்தியில், இந்த அணில் மட்டும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக, இந்த ஒற்றை அணில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ள சம்பவம், பல்கலைக்கழக வட்டாரத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த அணில் கல்லூரியின் வராண்டாக்கள் மற்றும் ஜன்னல் திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து, அவ்வழியே செல்லும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது எதிர்பாராத விதமாகப் பாய்ந்து கடிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளது . பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரி மற்றும் உளவியல் துறைகளின் நுழைவாயில் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த அணில் , கல்லூரியின் டீன் மற்றும் பல ஆராய்ச்சி மாணவர்களையும் தாக்கியுள்ளது.
இந்த அணிலைப் பிடிப்பதற்காக வனவிலங்கு மீட்புக் குழுவினர் பலமுறை கூண்டுகள் வைத்தும், அது எதற்கும் சிக்காமல் தப்பித்து வருவது அதிகாரிகளுக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.