India
oi-Vigneshkumar
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கு காந்தி மைதானத்தில் இருந்து ராஜ்பவனை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்ற நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதலில் டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் வெடித்து வருகிறது. இப்போது அது பீகாரிலும் மிக பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அங்கு நடக்கும் மாணவர்களின் போராட்டம் கவனம் பெற்றுள்ளது. BPSC எனப்படும் பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு மற்றும் ஆசிரியர் பணி நியமன தேர்வான TRE-4 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக சொல்லி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மாணவர்கள் கோரிக்கை
பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், 70வது பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதுதவிர TRE-4 தேர்வை மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்தும் திட்டத்துக்கும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீகார் அரசு
TRE-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே மாணவர்கள் காந்தி மைதானத்தில் இருந்து ராஜ்பவனை நோக்கி பேரணி சென்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மாணவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் வகையில் மாதந்தோறும் ‘வித்யார்த்தி சஹ்யோக் ஷிவிர்’ என்ற முகாம்கள் நடத்தப்படும் என பீகார் முதலமைச்சர் சம்ராட் சவுத்ரி அறிவித்தார்.
இந்த முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நான்காவது செவ்வாய்க்கிழமை கல்வி நிறுவனங்களில் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க முடியும் என்றும் கூறினார். மேலும், மாணவர்கள் தங்களது புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம் என்றும் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்ன என்பதை ஆன்லைனிலேயே செக் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும் சம்ராட் சவுத்ரி தெரிவித்தார். இதற்காக ஆன்லைன் போர்டல் மற்றும் 1100 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Patna, Bihar: Police use water cannons on students marching towards Raj Bhavan from Gandhi Maidan, demanding cancellation of the 70th BPSC examination. pic.twitter.com/51TYyR7knU
— ANI (@ANI) August 25, 2026
தேஜஸ்வி யாதவ் ஆதரவு
மாணவர்கள் போராட்டத்திற்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீகார் முதலமைச்சர் சம்ராட் சவுத்ரிக்கு கடிதமும் எழுதியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்காமல், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் புரட்சிகர இளைஞர் சங்கம், சத்ரா யுவா சங்கர்ஷ் மோர்ச்சா உள்ளிட்ட 14 மாணவர் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
சர்ச்சை
தேர்வு முறைகேடு விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிபிஎஸ்சி கட்டுப்பாட்டாளர் ராஜேஷ் குமார் கூறிய கருத்து மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. வினாத்தாள் லீக் குறித்த குற்றச்சாட்டு குறித்து அவர் பேசும்போது, “ஆயிரம் நாய்கள் குரைக்க தான் செய்யும்” என்பது போல கூறியிருந்தார். அவரது இந்த கருத்து மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கும் தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போராடும் மாணவர்களையும் இளைஞர்களையும் நாய்கள் என்று குறிப்பிட்ட அதிகாரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும் தேர்வுகள் மீண்டும் மீண்டும் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த பிரச்சினை முடிவே இல்லாமல் தொடர்வதாகவும் தேஜஸ்வி குற்றம்சாட்டினார்.
மோதல்
மாணவர்களின் பேரணியை முன்னிட்டு பாட்னாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.. முதல்வரின் இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. பல இடங்களில் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும், தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.