மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே ‘கள்ளர் சீரமைப்புத்துறை’ என்ற துறையை உருவாக்கி, 100-க்கும் அதிகமான கள்ளர் பள்ளிகள் உருவாக்கி, அதன் மூலம் பலரும் கல்வியால் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் 2 கிலோ மீட்டர் துரத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இதனால் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், வேலைகளுக்காக ஊர்மக்கள் இடம்பெயர்தல் போன்ற காரணங்களால், கிராமப்புற பகுதிகளில் இயங்கும் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை படிப்படியாக குறைந்து, இன்று பள்ளிகள் மூடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட சிரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓணாம்பட்டி கிராமங்களில் இயங்கி வந்த மூன்று அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இன்று மூடப்பட்டது.

இந்த ஊரில் உள்ள மக்கள் வேலை தேடி ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கிராமங்களில் பள்ளிகளில் சேர போதிய மாணவ, மாணவிகள் இல்லை.
அப்பள்ளிகளில் பயின்ற ஒரிரு மாணவ மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கும் கடந்த 2 ஆம் தேதியே பணி மாறுதல் வழங்கப்பட்டு, நிரந்தரமாக இக்கிராமங்களில் இயங்கி வந்த பள்ளிகள் மூடப்பட்டது, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை தாதம்பட்டி, ஓனாப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட சூழலில், அடுத்து வரும் தேர்தல்களில் இந்த கிராம மக்கள் அடுத்த அடுத்த கிராமங்களுக்குச் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுப்பதோடு, ஆரம்ப பள்ளி முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, மூடப்பட்ட பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.