தி.மு.க-வைச் சேர்ந்த துணை மேயர் சுனில்குமார் பேசும்போது, “என்னோட வார்டுல கடந்த டிசம்பர் மாசமே சில பணிகளுக்கு டெண்டர் விட்டாச்சு. ஆனா, எந்த வேலையும் நடக்கல. மாநகராட்சி நிர்வாகத்துல நடக்கிற எல்லா சீர்கேடுக்கும் நீ தான் (மேயர்) காரணம். உன்னால, மாநகராட்சியே நாசமா போச்சு. பணி ஆணை வழங்க மேயர் கமிஷன் கேட்கிறாங்க; வாங்குறாங்க’’ என்றார் கடும் கோபமாக.
இதனால், முகம் சிவந்து குறுக்கிட்ட மேயர் சுஜாதா, “காட்பாடி தொகுதியில துணை மேயர் தன்னோட `பினாமி’ பெயர்ல 40 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து ரோடு போடாம இருக்கிறார். இதனால, காட்பாடி மக்கள் தான் அவதிப்படுறாங்க. துணை மேயர் மாதிரியா பேசிக்கிட்டிருக்கிறார். என்கிட்ட சண்டைப் போடணும்னே வந்திருக்கிறார்’’ என்றார். தொடர்ந்து, மேயரை திட்டிபடியே ஒருமையில் `நீ, வா, போ..’ என்று சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார் துணை மேயர் சுனில்குமார். பதிலுக்கு மேயர் சுஜாதாவும், “ஒருமையில மரியாதை இல்லாம பேசாதீங்க’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

தி.மு.க கவுன்சிலர்கள் ஒருவர்கூட மேயருக்கு ஆதரவாக பேசவில்லை. அவர்களுமே மேயருடன் வாக்குவாதத்தில்தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு சீரியஸாக மன்றக்கூட்டம் நடந்தபோதும்கூட, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு `சுவத்துல மாட்டுங்க… சுவத்துல மாட்டுங்க’ என்று அடம்பிடித்தபடி குறுக்க, மறுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள் அ.தி.மு.க கவுன்சிலர்கள்.
கூட்டம் கடைசிவரை பயனுள்ளதாகவே நடைபெறவில்லை. காட்பாடி தி.மு.க Vs வேலூர் தி.மு.க என்று மாநகராட்சிக்குள் நிலவும் அடாவடி செயல்களால், அதிகாரிகளுமே அரண்டு போயிருக்கிறார்கள். ஆனாலும், இவ்வளவு நாள்களாக திரைமறைவில் பேசப்பட்டுவந்த நிர்வாக சொதப்பல்களும், கமிஷன் விவகாரங்களும் நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே போட்டுடைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த மேயர், துணை மேயர் ஆகியோரின் சாயம் வெளுத்துவிட்டதால், `இனி வரும் காலங்களில் மன்றக் கூட்டம் எப்படி நடக்கப் போகிறது?’ என்கிற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.