Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே அடுத்த சீசனிலும் தொடர்வார் என்று மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவை ஒரு வீரராக மும்பை அணியில் தக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும், சூர்யகுமார் யாதவை ரீடெய்ன் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த 3 ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்று 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. கேப்டன்சி மாற்றம், பயிற்சியாளர் மாற்றம் செய்த போது மும்பை அணியால் மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் மும்பை அணியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஒரு மாதமாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. அதன்படி மும்பை அணி நிர்வாகம் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனேவை தொடர்வது என்று முடிவு செய்துள்ளது. அடுத்த சீசனில் மும்பை அணியின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு, ஜெயவர்தனே உடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யலாமா என்பது முடிவு எடுக்கப்படும்.
அதேபோல் ஹர்திக் பாண்டியாவை கேப்டன்சியில் இருந்து இறக்கிவிட்டு திலக் வர்மா அல்லது பும்ராவை கேப்டனாக நியமிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் பங்கேற்று இருக்கிறார். அவரிடம் மீண்டும் கேப்டன்சியை ஏற்று ஒரு சீசனில் வழிநடத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் ரோகித் சர்மா அந்த ஆலோசனையை நிராகரித்திருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவின் ஆதரவு திலக் வர்மாவுக்கு இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யாமல் மும்பை அணி தக்க வைத்து கொண்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறப்படுகிறது. அவரை வீரராக தக்க வைக்க மும்பை அணி நிர்வாகம் விரும்புகிறது.
ஹர்திக் பாண்டியாவின் டிரேட் குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கேகேஆர் அணி தரப்பில் கேமரூன் க்ரீன் கொடுக்க முன் வந்துள்ளனர். ஆனால் மும்பை அணி தயங்குகிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி புதிய பயிற்சியாளரை நியமித்த பின், ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று தெரிகிறது.
இந்த ஆலோசனையில் முக்கியமாக சூர்யகுமார் யாதவ் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 35 வயதை எட்டிவிட்ட சூழலில், சூர்யகுமார் யாதவை ரீடெய்ன் செய்யலாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அவரை ரீடெய்ன் செய்யலாம் என்று ஆலோசித்துள்ளனர்.
இதனால் மும்பை அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. சீனியர் வீரர்களை ஓரம்கட்டாமல் மும்பை அணியால் மீண்டும் எழுந்திருக்க முடியாது என்று ரசிகர்கள் பேசி வந்த சூழலில், சிஎஸ்கே அணியை போல் மீண்டும் சீனியர்களை நம்பி இந்த சீசனில் களமிறங்கும் முடிவுக்கு அம்பானி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
