Cricket
oi-Yogeshwaran Moorthi
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அபிஷேக் சர்மா அரைசதம் அடிப்பது 5வது முறையாகும். இதன் மூலமாக அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அசத்தியது. அயர்லாந்து அணி தரப்பில் டக்கர் 50 ரன்களும், டெலானி 49 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் இஷான் கிஷன் களம் புகுந்தார். ஆனால் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை அபிஷேக் சர்மா எடுத்து கொண்டார்.
3வது ஓவரிலே 4 பவுண்டரி உட்பட 21 ரன்களை விளாசி தள்ளினார். பின்னர் இஷான் கிஷன் 1 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் சரவடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற அவர், அரைசதம் அடித்த கையுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
19 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலமாக அபிஷேக் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 20 பந்துகளுக்கு குறைவாக எதிர்கொண்டு 3 முறைக்கு மேல் எந்த வீரரும் அரைசதம் அடித்ததே கிடையாது. ஆனால் அபிஷேக் சர்மா 5வது முறையாக 20 பந்துகளுக்கு கீழ் எதிர்கொண்ட அரைசதம் விளாசி இருக்கிறார்.
இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா புதிய வரலாற்றை படைத்திருக்கிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதும் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா இந்திய அணியின் மானம் காத்துள்ளார். இதனால் அபிஷேக் சர்மாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.