International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்து பொருட்களை எடுத்து செல்வதில் சிக்கல் நீடித்த நிலையில், இதற்காக சீனா ஹெவி டியூட்டி ட்ரோன்களை கொடுத்து உதவியிருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சுமார் 60 கிலோ வரை மருந்துகளையும், உணவு பொருட்களையும் கொண்டு செல்ல முடியும்.
கடந்த ஆகஸ்ட் இறுதியில் நேபாள-சீன எல்லைக்கு அருகே இமயமலை பனிப்பாறை ஒன்று உடைந்ததால், கடுமையான திடீர் வெள்ளமும், மண்சரிவும் ஏற்பட்டு ஆறுகளில் பெருக்கெடுத்தது. இந்த இயற்கை பேரிடரால் நேபாளத்தில் இதுவரை 1,367 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேரை இன்னும் காணவில்லை.

உயிரிழப்பு ஒரு பக்கம் எனில், மறுபுறம் சாலைகளும், பாலங்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலன ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உணவு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த இடத்தில்தான் ட்ரோன்கள் பெரிய அளவுக்கு உதவின. ஹெலிகாப்டர்களை விட வேகமான, எளிதான மற்றும் மலிவான வழியாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ராணுவம் தேர்ந்தெடுத்திருக்கிறது.
இந்த நிவாரண பணிகளுக்காக சீனாவிடமிருந்து நிதியுதவியாக பெறப்பட்ட 4 DJI FlyCart 100 என்கிற அதிநவீன கனரக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் 3-4 கி.மீ வரை பறந்து சென்று ஒரே நேரத்தில் சுமார் 60 கிலோ எடை கொண்ட உணவு, மருந்துகளை விநியோகிக்கும் திறன் கொண்டவையாகும். தினசரி 10-16 முறை இந்த ட்ரோன்கள் மூலம் உணவு, மருந்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேபாள ராணுவத்தினர் விநியோகித்து வருகின்றனர்.
இந்த ட்ரோன்களில் சில அதிகபட்சமாக சுமார் 16 கி.மீ வரை கூட 40 கிலோ எடையை சுமந்துக்கொண்டு செல்லும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. மட்டுமல்லாது இமயமலை பகுதிகளில் நிலவும் கடுமையான குளிர், பலத்த காற்று மற்றும் லேசான மழை போன்ற மோசமான வானிலையிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் பறக்கும் வகையில் இந்த ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால், மீட்பு பணிகளுக்கு இவை பெரிய உதவியாக இருக்கின்றன.
இதில் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி செயல்படும் ரேடார்கள், பைனாகுலர் விஷன் சிஸ்டம் உள்ளிட்டவை பொறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் மலைப்பகுதிகளில் பறக்கும்போது மரங்கள், பாறைகள் அல்லது மின் கம்பிகள் ஆகியவை ஏதேனும் குறுக்கே இருந்தால் அவற்றை ட்ரோன் தானாகவே கண்டுபிடித்து விபத்தில் சிக்காமல் தப்பித்துவிடும். அதேபோல அவசர காலங்களில் ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்தால் அதில் உள்ள பாராசூட் தானாகவே விரிவடைந்து ட்ரோன் மெதுவாக தரையிறங்கும் பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது.
சில பகுதிகளில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கும், தேடுதல் பணிகளுக்கான கண்காணிப்புக்கும் கூட இந்த வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.