சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பான முதலீடுகள் மீது திரும்பியுள்ளதன் தாக்கமாக, சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி பதிவாகி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,560 என்ற உச்சத்தை எட்டியது. அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் விலை சரிவை கண்டது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்ததுடன், புதன்கிழமை மேலும் ரூ.240 சரிந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்திருந்தது.
ஆனால் அந்த நிலை நீடிக்கவில்லை. இன்று (ஜூன் 18) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,060 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.270-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 வரை குறைந்து ரூ.2.70 லட்சமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மீண்டும் உயர்வை சந்தித்துள்ள நிலையில், வரும் நாட்களில் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்தே விலை போக்கு அமையும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



