சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்றாவது முறையாகவும் நடைபெறும் இந்தப் போட்டிக்காகத் தமிழக அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், உலகின் முதல் 100 தரவரிசை வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழில்நுட்பங்கள்!
இந்த ஆண்டு முதன்முறையாக மூன்று போட்டி மைதானங்களிலும் “Electronic Line Calling’ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், சர்வதேச தரத்துக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் ஆடவர் ஏடிபி தொடர் கொண்டுவர முயற்சி!
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறைச் செயலர் சந்தீப் நந்தூரி, “போட்டிக்காகத் தமிழக அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், மைதானத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், எதிர்காலத்தில் ஆடவர் ATP டென்னிஸ் தொடரையும் தமிழகத்துக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.