India
oi-Rajkumar R
இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் என்ஆர்சி கோரிக்கையை முன்வைத்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நேரத்தில் காங்போக்பி என்ற மாவட்டத்தில் நான்கு நாகா கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த தாக்குதலில் பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கும், நிலையில் பாதிரியார் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்ததாக தங்க்குல் நாகா லாங் பரபரப்பு புகாரை கிளப்பி இருக்கிறது.
பல ஆண்டுகளாகவே மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. பல்வேறு இன குழுக்கள் வசித்து வரும் அந்த மாநிலத்தில் நீண்ட காலமாக இரு வேறு சமூகங்களுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை வருகிறது. அந்தப் பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்று (செப்.-1) மீண்டும் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மகுய் பிபுரம், லோயர் டாப்போன், மிடில் டாப்போன் மற்றும் அப்பர் டாப்போன் ஆகிய 4 நாகா கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தங்க்குல் நாகா லாங் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

மணிப்பூர் வன்முறை
இந்த தாக்குதலின் போது ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, டாப்போன் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் லூய்துய்போ நியூமை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் அதில் அவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு குக்கி ஆயுத குழுக்கள் தான் காரணம் எனவும் தங்க்குல் நாகா லாங் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் ( Suspension of Operations – SoO) கையெழுத்திட்ட சில குக்கி கிளர்ச்சி குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தங்க்குல் நாகா லாங்
அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டுக்கு அதிகாரப்பூர்வ விளக்கமும் பதிலோ இதுவரை வெளியாகவில்லை. நாகா மக்கள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து நிலம், அடையாளம் ஆகியவற்றுக்காக மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என தங்க்குல் நாகா லாங் செயற்குழு அழைப்பு விடுத்து இருக்கிறது. நாகா பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களை மத்திய அரசு மாநில அரசும் தடுக்க தவறினால் எதிர்காலத்தில் நிலைமை விபரீதமாகும் எனவும் இந்த தாக்குதலுக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கு
இந்த நிலையில் மணிபூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் என்ஆர்சி-யை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் முன்பாக தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சி யை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
முழு அடைப்பு
மீதேய் சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் கேம்பெய்ன் ஃபார் ஜஸ்ட் அண்டு ஃப்ரி டி-லிமிடேஷன் அமைப்பு இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
மேலும் அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்களின் வருகை மிக குறைவாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. என்ஆர்சி கோரிக்கை காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் மத்திய அரசு மணிப்பூரில் மேற்கொள்ள இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
என்ஆர்சி போராட்டம்
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்து உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கவும் மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்பால் பள்ளத்தாக்கில் இந்த என்.ஆர்.சி கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் இந்த உத்தரவால் திருப்தி அடையவில்லை எனவும், என்ஆர்சி தொடர்பாக மத்திய அரசு தெளிவான உத்தரவாதம் வழங்க வேண்டும் என அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
யுனைடெட் நாகா கவுன்சில்
மணிப்பூரில் முக்கியமான நாகா அமைப்பான யுனைடெட் நாகா கவுன்சில் அமைப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி வரையறைக்கு முன்பாக என்ஆர்சியை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறது.
யும்னம் கெம்சந்த் சிங்
இந்த நிலையில் மணிப்பூரில் முழு அடைப்பு போன்ற போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என பல்வேறு சமூக அமைப்புகளுக்கு மணிப்பூர் முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங், வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது போன்ற முழு அடைப்பு போராட்டங்கள் பொதுமக்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் யும்னம் கெம்சந்த் சிங் வலியுறுத்தி உள்ளார்.


