தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த நியமனம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியாகவில்லை.
தமிழகத்தில் முதல்வர்களின் அலுவலகங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவது புதிய நடைமுறை அல்ல. இருப்பினும், ஜான் ஆரோக்கியசாமியின் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அரசாணை இன்னும் வெளியிடப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு வாகனம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நியமனம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான ஆவணங்கள் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது.
முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியானபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அந்த நியமனத்துக்கான அரசாணை திரும்பப் பெறப்பட்டது.
அதேபோல், முதல்வரின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று முந்தினம் வெளியானது. ஆனால், அந்த அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 நாட்களுக்குப் பின்னரே அது பொதுவெளியில் வெளியானது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், ஜான் ஆரோக்கியசாமி முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாதது தவெக அரசின் நிர்வாக வெளிப்படைத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்ப வழிவகுத்துள்ளது.!