‘எங்களின் தலைவர் ஆலோசித்து முடிவெடுப்பார்’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் பேசியிருந்தார். அதேமாதிரி, ‘மேகதாது விவகாரத்துக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னால், சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுவரையறை பற்றி பேசி வாதத்தை திசைதிருப்புவதாகவும் உதயநிதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். இதுதொடர்பாக இரு கட்சியினர் வட்டாரத்திலும் விசாரிக்கையில், ‘தவெகவின் அனைத்துக் கட்சி கூட்ட அழைப்பே வினோதமாக இருக்கிறது. எம்.பிக்களே இல்லாத இந்த கட்சி எம்.பிக்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறது.
ஒரு அனைத்துக்கட்சி கூட்டமென்றால் முறைப்படி கட்சிகளின் தலைவர்களுக்குதான் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் கட்சித் தலைமையை விட்டுவிட்டு எம்.பிக்களுக்கு தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தனியாக அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதுவே மரபை மீறிய முறையற்ற செயல். மேலும், எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒருமித்த குரலில் மேகதாது விவகாரத்துக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கேட்கையில், அதை செய்யாமல் சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுவரையறைக்கு ஒரு டம்மி கூட்டத்தை கூட்டுகிறார்கள். இவர்கள் மனம் போன போக்கில் கூட்டும் கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும்’ என்கின்றனர்.
ஏற்கனவே காவிரி விவகாரத்தில் எந்த கட்சிகளின் கருத்தையும் கேட்காமல் கர்நாடகா கிளம்புகிறேன் என முதல்வர் எடுத்த முடிவு புஸ்வாணமாகியிருந்தது. இப்போது அனைத்துக் கட்சி கூட்டம்தானே கேட்டீர்கள்… இதோ கூட்டுகிறேன் என ஒரு டிசைனாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமும் முதல்வருக்கு பெருத்த பின்னடவை கொடுக்கப் போகிறதோ என கமெண்ட் அடிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!