அந்த கூட்டணி வருகிற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றிலும் ஒன்றாக இருந்து நீண்ட காலத்துக்கான கூட்டணியாக இது இருக்க வேண்டும். கூட்டணிக்கான பெயரை கூடிப் பேசி முடிவெடுப்போம். என் மனதில் ஒரு பெயர் இருக்கிறது. நீங்களும் உங்களின் பரிந்துரைகளை சொல்லுங்கள். கூடி முடிவெடுப்போம்’ என சுருக்கமாக தனது மெகா ப்ளானை முன்வைத்திருக்கிறார். மேலும், தலைவர்கள் மத்தியில் மட்டுமே இந்த கூட்டணியென்று இருக்கக்கூடாது, களத்தில் தொண்டர்களும் கைகோர்த்து வேலை செய்ய வேண்டும். அதற்காக மாவட்டந்தோறும் இந்த தோழமை கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற முடிவும் கூட்டத்தில் ஒருமித்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

‘என்னோட எம்.எல்.ஏக்களும் ராஜினாமா பண்ணியருந்தா நானும் கம்பீரமா உட்காந்திருப்பேன்….’ என பேச்சை தொடங்கினாராம் வைகோ.
‘இந்த ஆட்சி வந்ததுக்கு அப்புறம் ஊழல் இல்லாம போயிருச்சு. கமிஷன் இல்லை. கரப்ஷன் இல்லை. மக்கள் எல்லாம் இப்படி ஒரு ஆட்சியை பார்க்கதான் இத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தாங்க’ என ஏகத்துக்கும் புகழ காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் தரப்பினரும் அதை ஆமோதித்து முதல்வரையும் தவெக அரசையும் பாராட்டியிருக்கின்றனர். குறிப்பாக, ப.சிதம்பரம் சில துறைகளை குறிப்பிட்டு இந்த துறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களெல்லாம் வரவேற்கத்தக்கவை என கூற முதல்வர் குஷியாகியிருக்கிறார்.
இதில்தான் திருமாவோடு வந்திருந்த விசிகவின் சிறுத்தைகள் சிலர் கொஞ்சம் சங்கடமைந்தனர் என்கின்றனர். ‘திமுக அரசை நாமும்தான் ஆதரித்திருக்கிறோம். அப்படியிருக்க தவெக ஆட்சியில் ஊழல் இல்லை என்றால், நாம் ஆதரித்த திமுக ஆட்சியில் ஊழல் இருந்ததை கண்டுகொள்ளாமல்தான் இருந்தோம் என நாமே ஒத்துக்கொள்கிறோமா?’ என்று தங்களுக்குள்ளாகவே கிசுகிசுத்திருக்கின்றனர்.
கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்க ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்கிற விஷயத்தையும் தோழமை கட்சியினர் முதல்வரிடம் முன்வைத்திருக்கின்றனர்.
கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்களையும் எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம் என்கின்றனர். அதற்கு என்ன செய்யலாம் என்றும் தன்னுடைய சகாக்களிடம் ஆலோசிக்க தொடங்கிவிட்டாராம்.