சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் மாதம் வந்தாலே திமுகவில் முக்கிய நிகழ்வாக நடைபெறும் இந்த முப்பெரும் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை இணைத்து ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா முதலில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, கட்சியில் சிறப்பாக பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விழா நடைபெற இருந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால், முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழாவுக்கான மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று செப்டம்பர் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் திமுக சார்பில் வழங்கப்படும் முக்கிய விருதுகளான:
- பெரியார் விருது
- அண்ணா விருது
- கலைஞர் விருது
- பாவேந்தர் விருது
- பேராசிரியர் விருது
- மு.க. ஸ்டாலின் விருது
ஆகியவை கட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த விழா, இன்று நடைபெற உள்ள நிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விழாவில் கட்சி தொடர்பாக ஏதேனும் அதிரடியான முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வருகிற அக்-6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இது தொடர்பாக திமுக தலைமை ஏதேனும் முடிவுகள் எடுத்திருக்கலாம் என்றும், அதனை இந்த முப்பெரும் விழாவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

