மும்பை கனமழை: புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு; இருவர் உயிரிழப்பு; தற்போதைய நிலவரம் என்ன? | Heavy rain in Mumbai: Suburban train services disrupted; two dead

Spread the love

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

மும்பை நகரின் இன்று காலை பல பகுதிகளில் கனமழை பெய்தது. திங்கட்கிழமை தொடங்கிய மழை, கடந்த இரண்டு நாள்களாக நகரைப் புரட்டிப் போட்டு வருகிறது. இன்று காலை தெற்கு மும்பையில் உள்ள பரேல், தாதர், சயான், பைகுல்லா, கொலாபா மற்றும் மரைன் லைன்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது.

மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து அந்தேரி, குர்லா, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் முலுண்ட் போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அந்தேரி சுரங்கபாதையில் தண்ணீர் நிரம்பியதால் அது தற்காலிகமாக மூடப்பட்டது.

பள்ளி வாகனத்தில் விழுந்த மரம்

பள்ளி வாகனத்தில் விழுந்த மரம்

இதையடுத்து விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை மாற்றவும் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்தேரி சுரங்கப்பாதையில் இந்த வார தொடக்கத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வெள்ளம் ஏற்பட்டது.

பகல் நேரத்தில் தண்ணீர் குறைந்தாலும், ஒரே இரவில் பெய்த மழையால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மீண்டும் சுரங்கப்பாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மும்பை, தானே, ராய்கட் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி மின்னல், புயல் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் ராட்சத மோட்டார் பைப்கள் வைக்கப்பட்டு உடனுக்குடன் தேங்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் நெரூல் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் சேவையில் மின் வயர் அறுந்து விழுந்ததால் ஹார்பர் லைனின் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு வயரைச் சரி செய்தனர். இதனால் ரயில் போக்குவரத்து சீரடைந்தது.

மழை நேரத்தில் தேவையில்லாமல் பழுதடைந்த கட்டிடங்கள், தண்ணீர் தேங்கும் சாலைகள், மரங்களுக்கு அடியில் செல்வதைத் தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கனமழையால் செம்பூரில் மரம் ஒன்று ஒடிந்து விழுந்ததில் 11 வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதே போன்று தென்மும்பையில் உள்ள வால்கேஷ்வரில் கட்டிடம் ஒன்றின் பால்கனி இடிந்து விழுந்ததில் பரஸ்கர்(51) என்ற நபர் உயிரிழந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *