CCTV இருந்தும் நோ யூஸ்.. ராமர் கோயில் நன்கொடை திருட்டில் புதிய திருப்பம்.. அதிர்ச்சி தகவல்கள்! | Ayodhya Ram Mandir Donation Theft Probe: Ex-Trustee Under Scanner, CCTV Evasion Tactics Revealed

Spread the love

India

oi-Vigneshkumar

லக்னோ: ராமர் கோயில் மோசடி விவகாரம் இப்போது மிகப் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. இதில் கோயில் அறங்காவலராக இருந்த அனில் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாக இப்போது புதிய பூதம் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சிசிடிவி கேமரா இருந்தபோதும் உண்டியல் பணம் எப்படித் திருடப்பட்டது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களால் தங்களால் முடிந்தவற்றை காணிக்கையாகவும் தருகிறார்கள். பக்தர்கள் நம்பி தரும் காணிக்கையை உண்டியல் எண்ணும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே திருடிய சம்பவம் பெரிதாக வெடித்துள்ளது.

Ayodhya Ram Mandir Donation Scam Ayodhya Ram Mandir

ராமர் கோயில் விவகாரம்

இந்த விவகாரத்தில் விசாரணை இப்போது தீவிரமடைந்துள்ள நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர் அனில் மிஸ்ராவை நோக்கி போலீசார் திரும்பியுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அனில் மிஸ்ராவிற்கும் முக்கிய பங்கு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவினாஷ் மிஸ்ராவிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது.. அவர் அனில் மிஸ்ராவின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமர் உண்டியல் விவகாரம் பெதிகா வெடித்த நிலையில், அனில் மிஸ்ரா கடந்த வாரம் தான் ராமர் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியிலிருந்து விலகினார். அவருடன் பொது செயலாளர் சம்பத் ராயும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் இருவரிடமும் சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனில் மிஸ்ரா

ராமர் கோயிலில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் அனில் மிஸ்ரா கொடுத்த பரிந்துரை அடிப்படையிலேயே வேலைக்கு சேர்ந்துள்ளனர். சுமார் 125 பேர் அனில் மிஸ்ராவின் பரிந்துரை மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதில் பலர் அனில் மிஸ்ராவின் உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வேலைகளை பெற்று தர அனில் மிஸ்ரா கமிஷன் பணம் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அது குறித்தும் தனியாக விசாரணை நடந்து வருகிறது. மேலும், அனில் மிஸ்ரா அறங்காவலரான பிறகே அவரது சொத்துக்கள் உயர்ந்துள்ளதா என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

யாரும் கேள்வி கேட்கல

உண்டியல் பணத்தைத் திருடியவர்களுக்கு அனில் மிஸ்ராவிடம் இருந்த நெருக்கமான உறவு காரணமாகவே அவர்களை மற்ற ஊழியர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லையாம். இதைக் குற்றவாளிகளே தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். அனில் மிஸ்ராவும் கூட கோயில் நன்கொடைகளை எண்ணும் பணியில் நேரடியாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எங்கு அமைந்துள்ளன என்பதை இவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

சிசிடிவியில் இருந்து தப்பியது எப்படி?

கேமராக்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, இவர்களில் ஒருவர் பணத்தை எடுக்கும்போது மற்றவர்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு கேமராக்களை மறைத்துள்ளனர். பின்னர் அந்தப் பணத்தைக் கழிவறைக்குக் கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளனர். சரியான நேரம் கிடைக்கும்போது அந்த பணத்தை அப்படியே வெளியே எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாரிகளுடன் இருந்த நெருக்கம் காரணமாகப் பணத்தை வெளியே செல்லும்போது யாரும் இவர்களைச் சோதனையிடவும் இல்லை.

கோயில் நன்கொடை எண்ணும் ரூமின் ஒரு சாவி டின்னு யாதவிடம் இருந்த நிலையில், மற்றொரு சாவி வங்கி ஊழியர்களிடம் இருந்துள்ளது. வங்கி ஊழியர்களுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியே இந்த திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணத்தை டின்னு யாதவும் வங்கி ஊழியர்களும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனர். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் தான் இந்த பணத்தை எண்ணும் பணியை மேற்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *