`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு’ – கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

Spread the love

முடக்கப்பட்ட கவுன்ட்டர்களும். திறந்தவெளி கழிப்பிட அவலமும்!

தென்மாவட்டப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேட்டில் பெரும்பாலான டிக்கெட் கவுன்ட்டர்கள் மூடப்பட்டு, அந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி முடக்கப்பட்டுள்ளன. இதனால், முறையான வழிகாட்டுதலோ அல்லது போதிய கழிவறை வசதியோ அந்தப் பகுதிகளில் இல்லை.

நள்ளிரவிலும், அதிகாலையிலும் வரும் பயணிகள், அவசரத் தேவைகளுக்குக் கழிவறைகளைத் தேடி அலைகின்றனர். வேறு வழியின்றிப் பலர், பேருந்து நிலையத்தின் ஒதுக்குப்புறமான திறந்தவெளிகளையே கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தப் பகுதியும் மேலும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு உள்ளாகியுள்ளது.

பயணிகள் வேதனை: நோய் பரவும் அபாயம்!

இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த சில பயணிகளிடம் பேசியபோது, தங்களின் குமுறல்களை வேதனையோடு பகிர்ந்துகொண்டனர்.

“பஸ்ஸுக்காகக் கொஞ்ச நேரம் இங்க நிக்கக்கூட முடியல. அந்த அளவுக்குக் கொடூரமான தூர்நாற்றம் வீசுது. கழிவறைகளில் தண்ணி வராததால் உள்ளே நுழையவே பயமாக இருக்கு. இந்தத் தூர்நாற்றத்தால் நிச்சயம் மக்களுக்குப் பெரிய அளவில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. காசு கொடுத்துப் பயணம் செய்யுற பொதுமக்களுக்கு இந்த அடிப்படை வசதியைக் கூடவா அரசு செஞ்சு தரக் கூடாது?” என்று ஆதங்கப்பட்டனர்.

அரசுக்குக் கோரிக்கை

கிளாம்பாக்கத்திற்குப் பேருந்துகள் மாற்றப்பட்டுவிட்டதால், கோயம்பேட்டை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பிரதான குமுறலாக இருக்கிறது. இன்னமும் சென்னைக்குள்ளும், அண்டை மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள்.

எனவே, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய தூய்மையான கழிவறைகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், திறந்தவெளியைச் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றுவதைத் தடுக்கப் போதிய கண்காணிப்பும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

– கலையரசி மு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *