பனி மூடிய இமயமலையின் சிகரங்களை ரசிப்பதும், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுச் சாதனை படைப்பதும் பல மலையேற்ற வீரர்களின் வாழ்நாள் கனவாகும். ஆனால், நாம் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் அந்தப் பனிமலைகளின் பின்னால் இன்று ஒரு மிகப்பெரிய சோகம் மறைந்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை ஆறு முறை ஏறி உலக சாதனை படைத்த நேபாளத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் மலையேற்ற வீராங்கனையான பூர்ணிமா ஸ்ரேஸ்தா, தற்போது எவரெஸ்ட் மலைப்பகுதி சந்தித்து வரும் ஆபத்துக்களைக் குறித்து உலகிற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த வருடம் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய தனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பூர்ணிமா, எவரெஸ்ட் சிகரம் மிகவும் பலவீனமாகவும், ஆபத்தானதாகவும் மாறி வருவதாகக் கூறியுள்ளார். வெப்பமயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதால், மலையேறும் பாதைகள் அனைத்தும் சரிந்து விழும் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நாம் இயற்கையை எந்தளவுக்குப் பாழாக்குகிறோம் என்பதைப் பார்க்கும்போது, உலகம் எப்போதுதான் இதைக் கேட்கப் போகிறது?” என்று அவர் வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளார்.