மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 13 அன்று தள்ளுபடி செய்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியும், இந்த வழக்கை மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், “முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யப் போதிய முகாந்திரம் இல்லை’ எனக் கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தவெ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக-வின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு தழுவிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருப்பதாலும் அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது நல்லது.