அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகத்தின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் தவெக-வுக்கு ஆதரவாகவும், எடப்பாடியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 22 பேர் எதிராகவும் வாக்களித்ததைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, தமிழ்நாடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நேரில் சந்தித்து த.வெ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் விவாதத்தை தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க எம்.பி வில்சன் தன் எக்ஸ் பக்கத்தில், “கட்சித் தாவல் குற்றச்சாட்டிற்குள்ளான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக 21 நாட்களுக்குள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தலைமைச் செயலக வளாகத்திலேயே தங்களை த.வெ.க கட்சியில் இணைத்துக் கொண்டனர்.