மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இந்தத் தீர்மான விவாதத்தில் அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இதில் திமுக மும்மொழிந்த ஒரு திருத்தம் அந்தத் தீர்மானத்தில் இணைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போதையச் சூழலில் திமுக முன்மொழிந்த இந்தத் திருத்தத்தின் அவசியம் மற்றும் டெல்டா பகுதி விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியது கடமையாகிறது.
கடந்த 2018 ஜனவரி 22 அன்று மத்திய நீர்வள ஆணையம் (CWC) சில நிபந்தனைகளுடன் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் கடந்த 2025 டிசம்பர் 13 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய நீர்வள ஆணையம் சில நிபந்தனைகளோடுதான் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட நிபந்தனைகளை மீறி கர்நாடகா தொடர்ந்து DPR தயாரிப்பில் ஈடுபட்டால், அதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.