“ஆட்டமும் பாட்டமும் போதும்: ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்” – தமிழக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சாடல் | “Focus on governance” – Tamilisai Soundararajan slams the Tamil Nadu government.

Spread the love

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்துக்கான நேரடி இணைப்பு உள்ளது. மீதமுள்ள மக்களுக்கு இந்த வசதி இன்னும் சென்றடையவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப குறைந்தது 500 மினி பேருந்துகளையாவது இயக்க வேண்டும் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

சென்னை போன்ற ஒரு மாநகரத்திலேயே இந்த நிலை என்றால், தமிழக அரசு எந்த அளவிற்குத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம் என்று விளம்பரம் செய்கிறார்களே தவிர, போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதில் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

உயர்கல்வித்துறை அமைச்சர் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார், ஆனால் மூன்று மொழிக் கொள்கையை எதிர்க்கிறார். வெளிநாட்டு மொழிகளை ஆதரிப்பவர்கள், உள்நாட்டு மொழிகளைக் கற்கக் கூடாது என்று சொல்வது இவர்களின் கொள்கை தெளிவின்மையைக் காட்டுகிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, குழந்தைகள் இந்திய மொழிகளைக் கற்பதைத் தடுத்து, வெளிநாட்டு மொழிகளைப் படிக்குமாறு வற்புறுத்துகிறார்கள்.

தனியார் நீட் பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார். தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டால் அதற்கு இவர்கள் பொறுப்பேற்பதில்லை, ஆனால் எந்தக் குளறுபடி நடந்தாலும் பிரதமரைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு இங்குள்ள தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்தி, அவர்கள் அதிக பணம் கொள்ளையடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்து காட்டினோம்.

அதைவிடுத்துப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது. அமைச்சர்கள் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் பாட்டுப் பாடுவதிலும், ஆட்டம் போடுவதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள். ஆட்டமும் பாட்டமும் ஆடியது போதும், இனிமேலாவது ஆட்சியில் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *