மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக கடந்த 13.01.2025 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அப்போதைய முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல்சக்தி துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணைப் பிரச்சனை ஒரு புதிய நதிநீர் தாவா என்பதால், நதிநீர் தாவா சட்டம் 1956-ன் பிரிவு 4-ன் கீழ் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
எனவே, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில், “1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின்படி புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற எனது பெயரிலான திருத்தத்தைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்க இந்த அரசு எடுக்கும் அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும்.

நடப்பு ஆண்டில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே, அடுத்து நடக்கவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களை வலுவாக எடுத்துரைத்து, நமக்குரிய நதிநீரை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும். இறுதியாக, கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி ஒரு முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன்.
இந்தத் தீர்மானத்தைக் கடிதம் மூலமாக மட்டும் அனுப்பாமல், தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களும் ஒரு கூட்டுக்குழுவாக நேரில் சென்று ஒன்றிய அரசிடம் வழங்கி நம்முடைய ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுக தயாராக உள்ளது என்று கூறி, இத்தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்கின்றேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.