Tamilnadu
oi-Halley Karthik
சேலம்: முதலமைச்சர் விஜய் இன்று மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை திறந்து வைக்கிறார். 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த தண்ணீர் திறப்பால் பெரிய அளவுக்கு பலன் இருக்காது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
வழக்கமாக ஜூன் 12 அன்று திறக்கப்பட்டிருக்க வேண்டிய அணை, கர்நாடகா போதிய நீர் வழங்காததால் தாமதமாக திறக்கப்படுகிறது. இப்போது திறக்கப்பட்டாலும் கூட.. விவசாயிகள் எதிர்பார்த்த பலனை காவிரி நீர் தராது என்று கூறப்படுகிறது.

குறுவை சாகுபடி
ஜூன் அணை திறப்பை நம்பி குறுவை சாகுபடி நடக்கும். குறுவை 120 நாட்கள் பயிர். 100-120 நாட்கள் வரை தொடர்ந்து தண்ணீர் தேவை. ஆனால் அணையிலிருந்து 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என்று சொல்வது, ஏமாற்றமளிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
டெல்டா விவசாயிகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று திருச்சி, தஞ்சை, அரியலூர் போன்ற மேல் டெல்டா மாவட்டங்கள். இன்னொன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற கீழ் டெல்டா மாவட்டங்கள். இதில் மேல் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் போர்வெல் வசதியை கொண்டிருக்கின்றன. இவர்கள் காவிரி நீர் வந்தாலும், வராவிட்டாலும் ஜூன் மாதம் குறுவை சாகுபடியை தொடங்கிவிடுவார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து 45 வரும் நீரை வைத்து குறுவை சாகுபடியை முடித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையின் நீர் போதுமானதாக இருக்கும்.
கீழ் டெல்டா மாவட்டங்களில் போர்வெல் என்கிற செட்டப் கிடையாது. முழுக்க முழுக்க இவர்கள் மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரை நம்பிதான் குறுவை சாகுபடி செய்கிறார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் தண்ணீர் போதாது. இதை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கினால்.. பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவேதான் இப்போது அணை திறக்கப்பட்டாலும் அது பெரும்பாலான விவசாயிகளுக்கு பலன் தராது என்று சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரே வழிதான் இருக்கிறது. 45 நாட்களுடன் நிறுத்தாமல்.. குறைந்தபட்சம் 100 நாட்களுக்காவது மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாளைக்கு 1 டிஎம்சி என்கிற விகிதத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதை செய்ய வேண்டும் எனில், அணைக்கான நீர்வரத்து சீராக இருக்க வேண்டும்.
இன்று காலை நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. இருப்பினும் 100 நாட்களுக்கு தொடர்ந்து இதே அளவு தண்ணீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகாவிலிருந்து கேட்டு பெற வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் டெல்டாவில் குறுவை சாகுபடி முழுமையாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.