இதன்படி, டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்கள் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் மானியம் மற்றும் புதிய நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கிலோமீட்டர் நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், நீர்வளத்துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளில் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்காக நாளொன்றுக்கு 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நீர் மேலாண்மை மேம்படுத்தப்படுவதுடன், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டு, நெல் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.