நான்கு எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் புகார்களுடன் வந்தனர். அவர்களை போலீசார் மிரட்டுகின்றனர். கூட்டத்தில் கலந்து கொண்டால் ஆயுதச்சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டி இருக்கிறார்கள். இது என்ன ஜனநாயகம்? மாநிலத்தில் ஒடுக்குமுறையின் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளன” என்று மம்தா பானர்ஜி பேஸ்புக் லைவ் வீடியோவில் கூறியுள்ளார்.
மம்தா இல்லாத திரிணாமுல் காங்கிரஸ்
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையை மாற்றியது போன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் தலைமையை மாற்ற பா.ஜ.க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா பால்தாக்கரே குடும்பத்தின் கையில் இருந்து துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கையிக்குச் சென்றுவிட்டது. 2022ம் ஆண்டு சிவசேனாவில் ஏற்பட்ட ஒரு பிளவு இந்த மாற்றத்திற்கு வழி வகுத்தது.
அது போன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் மம்தா பானர்ஜி இல்லாத முதுகெழும்பு இல்லாத ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனியாகச் சந்தித்து ஆலோசனை
ஏற்கனவே மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர் பங்கேற்கவில்லை. அதேசமயம் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் சில எம்.எல்.ஏ.க்கள் ரத்தின் கோஷின் வீட்டில் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு சில எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.குணால் கோஷ் கூறுகையில், “தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கேட்வே ஹோட்டலில் கூட்டம் நடத்தியவர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
நம்மில் எவரும் சுயேச்சை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். 70 வயதான ஒரு பெண்மணியை மாநிலம் முழுவதும் சோர்வின்றிப் பயணிக்கச் செய்தும், அவருடைய பிம்பத்தைப் பயன்படுத்தியும் நாம் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனோம்.

நிச்சயமாக, ஒரு மனிதனுக்குக் குறைந்தபட்சம் ஒரு துளி அளவேனும் மனச்சாட்சி இருக்க வேண்டாமா? கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சி நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இதற்கு பாஜகவைப் பொறுப்பாக்க நான் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக, இதற்கு சில நபர்கள்தான் காரணம் ஆகும். அவர்கள் சந்தர்ப்பவாதிகள்,” என்று அவர் கூறினார்.
ஆனால் ஹோட்டலில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசிக்கொண்டதை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரிஜு தத்தா உறுதிபடுத்தி இருக்கிறார். இதையடுத்து கட்சித் தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறது.