மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து வருகின்றன.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் புதிதாக பிறந்து சில நாட்களில் 10 குழந்தைகள் இறந்துள்ளன. அதோடு இந்த மாதத்தில் முதல் மூன்று வாரத்தில் மட்டும் 60 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால் அவற்றில் 44 குழந்தைகள் பிற மருத்துவமனைகளில் பிறந்து, பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.
மீதமுள்ள 16 குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து இறந்தனர். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை இது குறித்து முறையாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மால்டா அரசு மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் பிற மருத்துவமனையில் பிறந்து மால்டா அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை அனுப்பிய மருத்துவமனைகளை முழுமையாக ஆய்வு செய்ய மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வர் டாக்டர் பிரசென்ஜித் இது குறித்து அளித்த பேட்டியில், “‘ஒரே நாளில் இறந்த 10 குழந்தைகளில் எட்டு குழந்தைகள் வெளியில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டவை. இரண்டு மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிறந்தன. குறைவான பிறப்பு எடை, மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரச்னைகளால் இந்த இறப்புகள் ஏற்பட்டன.
இது பெரும்பாலும் முன்கூட்டிய அல்லது சிக்கலான பிரசவங்களிலிருந்து உருவாகும் பிரச்னைகள் ஆகும். இது குறித்து சுகாதாரத்துறைக்கு முதல் கட்ட அறிக்கை அனுப்பபட்டுள்ளது” என்று கூறினார்.
சுகாதார அதிகாரிகள் இதுவரை 16 மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் ஆய்வு செய்துள்ளனர். தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு உள்ளதா என்பதையும், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான தற்போது குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.