விருப்பமின்மையால் ஏற்படும் சலிப்பு, மனைவியோடு சகஜமாகிக்கொள்ள அவரிடம் நீட்டும் கட்டாயப் புன்முறுவல், மனைவியின் செயலால் உண்டாகும் ஏமாற்றம், குடும்பத்தினர் மீது அள்ளித் தெளிக்கும் கோபம் என உணர்வுத் தோரணங்களைப் பந்தல் முழுக்க அலங்கரித்திருக்கிறார் நாயகன் ரிஷிகாந்த். எமோஷனல் பந்தியிலும் தேவையானதைப் பரிமாறியிருக்கிறார். வெல்கம் ஹீரோ ரிஷிகாந்த்! படம் முழுக்கப் பேச்சிலும் உடல் மொழியிலும் எப்போதும் பதற்றத்தையும் ஆற்றாமையையும் பிடித்துக்கொண்டே நகரும் முத்துச்செல்விக்கு உயிர் தந்திருக்கிறார் அனிஷ்மா. “எனக்கு பிடிச்சதை பண்ணினது தப்பா’ எனச் சமூகக் கட்டமைப்புகளைக் கேள்வி எழுப்பும் காட்சியிலும் கிளாப்ஸ் வாங்குகிறார். மணமேடையில் போடும் குத்தாட்டம், க்ளைமாக்ஸ் அலறல் இரண்டுமே ஆற்றாமையின் வெளிப்பாடு! ஆனால், தென்மாவட்ட வட்டார மொழி மட்டும் இவரிடத்தில் துருத்தலாகத் தெரிகிறது.

தன்னுடைய பொருளாதார நிலை உருவாக்கும் பயத்துடன் நகைச்சுவையையும் குறைவின்றி கலந்து கட்டித் தந்திருக்கிறார் ராஜா கருப்பசாமி (இவரே இப்படத்தின் இயக்குநர்). எந்நேரமும் கல்யாண வீட்டில் ஆவலாதி இழுக்கும் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள் ரகளையைக் கூட்ட, மற்றொரு பக்கம் அப்துல் லீ காமெடி நாதஸ்வரத்தை ஸ்ருதியோடு வாசித்திருக்கிறார். இவர்களைத் தாண்டி, சேத்தன், ஏ. வெங்கடேஷ், ஷெல்லி கிஷோர், சுமித்ரா தேவி, சங்கீதா பாலன், கார்த்திக், வர்ஷினி கார்மேகம் ஆகியோர் அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சூப்பர்வே மக்கா!