Srilanka
oi-Vignesh Selvaraj
கொழும்பு: இலங்கையில் உள்ள 2 சிறைகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறைகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 23-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கை சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சிறைகளில் கடும் இட நெருக்கடி காரணமாகவும், போதைப்பொருள் கும்பல்களின் ஆதிக்கத்தாலும் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கொழும்பிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள குருவிட்ட சிறையில் வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

போதைப்பொருள் அடங்கிய பை ஒன்று வெளியில் இருந்து சிறைக்குள் வந்தது கண்டறியப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கைது நடவடிக்கையுமே இந்தக் கலவரத்திற்கான உடனடித் தூண்டுதலாகத் தெரிகிறது. இது அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குப் பதிலடியாகவே அமைந்தது என்பது தெளிவாகிறது” என சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக கொழும்பு மேகசின் சிறையில் கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 40 கைதிகள், சிறை அறையை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டதில் ஒரு கைதி உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் நேற்று கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள சில கைதிகள் சிறைச்சாலையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நெகம்போவில் உள்ள ஒரு திறந்தவெளிச் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் அங்கு அமைதி திரும்பியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நீர்கொழும்பு சிறையில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 33 பேர் உயிரிழந்தனர். இலங்கை சிறைகளில் நிலவும் கடும் இடநெருக்கடியே இத்தகைய தொடர் வன்முறைகளுக்குக் காரணம் என மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

